தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிட்டன- கி. துரைராஜசிங்கம்

16060 0

தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி. துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் நிகழ்வு கி.துரைராஜசிங்கம் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த கி.துரைராஜசிங்கம்,

எங்களுக்குள் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. நாங்கள் ஒரு குடும்பம் நாங்கள் ஒன்றாகவே இருப்போம். குடும்பத்தில் யாரும் பிரச்சினைகளால் பிரிந்து சென்றாலும் நாங்கள் ஒன்றாகவே இருப்போம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு நாங்கள் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தோம்.ஏற்கனவே நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகபோக ஆதரவினைப்பெற்ற ஒரு கட்சி. தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றாக பயணிக்க வேண்டும் என்று புத்திஜீவிகள், கல்விமான்கள், ஊடகவியலாளர்களின் கருத்துகளை கவனத்தில்கொண்டு பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்னும் கூட்டை முன்நகர்த்தி வருகின்றோம். இது ஏனையவர்களுக்கு ஒரு செய்தியாக இருக்க வேண்டும்.

தமிழ் மக்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்று கூறிவிட்டு வெவவேறு திசைகளில் சென்று குரல் எழுப்பிக்கொண்டிருப்பது வெறுமனே வார்த்தைகளாக இருக்குமே தவிர செயற்பாடாக இருக்க முடியாது.

தற்போது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளவர்கள் கூட தமிழ் மக்களின் நாடித்துடிப்பை அறிந்துகொண்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்துகளை அறிந்துகொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணையவேண்டும். மக்கள் அனைவரும் எங்களோடுதான் இருப்பார்கள்.

பலர் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அவர்கள் செய்யும் செயலே அவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தும். வெறும் வார்த்தைகளினால் கூறுவதைக் கொண்டு மக்கள் அவர்களை மதிப்பிடமாட்டார்கள். அவர்கள் என்ன செய்தார்கள் என்பதையெல்லாம் மக்கள் அறிந்து வைத்துள்ளனர். ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் ஆதரவு எங்கள் பக்கம் உள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் கைப்பற்றி அதன் மூலம் சிறந்த சேவையினை அபிவிருத்தி திட்டங்களை செய்யும் அதேவேளையில் இலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் தமிழர்கள் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பின்னால் நிற்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்தி புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாட்டினை முன்நகர்த்தி செய்யும் என்றார்.

Leave a comment