அல்லைப்பிட்டியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நேற்று அதிகாலை புகுந்த கொள்ளையர்கள் தனித்திருந்தவரைக் கட்டிவைத்துவிட்டு 20 பவுண் நகை மற்றும் 2 லட்சம் ரூபா காசு என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது:
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் உள்ள குறித்த வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகள் உறவினர் வீட்டுக்குச் சென்ற சமயம் கணவர் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அதிகாலை சுமார் ஒரு மணியளவில் ஆறுபேர் கொண்ட குழுவினர் குறித்த வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
இதன் பின்னர் அவர்கள் வீட்டில் இருந்தவரைக் கட்டி வைத்துவிட்டு 20 பவுண் நகை மற்றும் 2 லட்சம் ரூபா ஆகியவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றனர். இதன் பின்பு குடும்பத் தலைவர் அயலவர்களின் உதவியுடன் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.