பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 8 ஆண்டுகள் தடுப்பில் இருந்தவர் விடுதலை

213 0

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எட்டு ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ரெலோ உறுப்பினர் ஒருவருக்கு பிணையில் செல்வதற்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றைய தினம் அநுராதபுரம் மேல் நீதிமன்றில் இவ் வழக்கானது விசாரணைக்காக எடுத்துகொள்ளப்பட்டிருந்த போதே மேற்படி உத்தரவானது நீதிபதி உபாலி குணவர்த்தனவினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2009 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தமை மற்றும் அதற்கு உடந்தையாக அந்தோனிப்பிள்ளை மரியசீலன் செயற்பட்டமை என்ற குற்றச்சாட்டின் கீழ் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ் வழக்கில் ஆரம்பத்திலேயே செல்வம் அடைக்கலநாதன் பிணையில் செல்ல சட்டமா அதிபர் அனுமதித்திருந்ததுடன் மரீயசீலனை விளக்கமறியில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் குறித்த வழக்கானது ஆரம்பத்தில் வவுனியாவில் இடம்பெற்று வந்த நிலையில் பின்னர் சட்டமா அதிபரால் அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த வழக்கானது இன்றைய தினம் அநுராதபுரம் மேல் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது மன்றில் எதிரி சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சிறிகாந்தா முன்னிலையாகியிருந்தார். இவரால் குறித்த இரண்டாம் எதிரியை பிணையில் விடுவிக்க வேண்டும் என ஏற்கனவே சட்டமா அதிபருக்கு செய்யப்பட்ட விண்ணப்பத்தை சட்டமா அதிபர் ஏற்றுக்கொண்டு சம்மதித்துள்ளதாக அரச சட்டவாதி மன்றுக்கு தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து நீதிபதி குறித்த நபரை தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு ஆட்பிணையிலும், 10 ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும் செல்ல அனுமதியளித்து உத்தரவிட்டார்.

Leave a comment