சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்து வதற்காக, மகிந்த அணியுடன் ஐக்கிய தேசியக் கட்சி பேச்சு மேற்கொண்டது. அதனைத் தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள்.
இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலரும் அமைச் சருமான மகிந்த அமரவீர தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:
சிறிலாங்கா சுதந்திரக்கட்சியை ஒன்றாக இணைத்து வலுவாகத் தேர்தலுக்கு முகம்கொடுக்கும் எதிர்பார்ப்புடனேயே நாம் மகிந்த அணியுடன் பேச்சு நடத்தியிருந்தோம். அந்த அணியினரின் கடுமையான நிபந்தனைகள் காரணமாக ஒன்றிணைவது குறித்த பேச்சுக்கள் முறிவடைந்துள்ளன. எமக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் இடையே எந்த விதமான ‘டீலும்’ இல்லை.
மகிந்த அணிக்கே ஐக்கிய தேசியக் கட்சியுடன் ‘டீல்’ உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்பார்ப்பு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாகப் பிளவுபடுத்துவதாகும். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற உதவியது யார்? மகிந்த அணியே அந்த எதிர்பார்ப்பை நடைமுறைச் சாத்தியமாக்கியுள்ளது – என்றார்.