மாவீரர் தின நிகழ்வுகள், வடக்கு கிழக்கு மாகாணங்களில் உணர்வு பூர்வமாக நேற்று அனுஸ்டிக்கப்பட்டது.
தமிழ் மக்களுக்காக தம்மை தியாகம் செய்த தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர்களுக்கான சுடரேற்றும் நிகழ்வு யாழ்ப்பாணம் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.
தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த மாவீரர்களுக்கான சுடரேற்றும் நிகழ்வு மாலை 6:05 மணிக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளால் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
சுடரேற்றி வணக்கம் செலுத்தும் நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினராகிய மாவை சேனாதிராசா, வடக்கு மாகாண சபையின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் 1989 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் விடுதலைக்காக தம்மை ஆகுதியாகியவர்களை நினைவு கூர்ந்து மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
1989 ஆம் ஆண்டு தொடக்கம் 2008 ஆம் ஆண்டு வரை 19 வருடங்களாக தமிழீழ விடுதலைப்புலிகளால் மாவீரர் தினம் நவம்பர் 27 ஆம் திகதி அனுஸ்டிக்கப்பட்டு வந்தது.
2008 ஆம் ஆண்டு போர் உச்சக் கட்டமாக நடைபெற்ற நிலையில் கிளிநொச்சி மாவட்டம் வட்டகச்சி இராமநாதன் மகா வித்தியாலத்தில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
19 ஆண்டுகள் நடாத்தப்பட்ட மாவீரர் அஞ்சலி நிகழ்வுகள் இராணுவ இறுக்கங்கள் மத்தியில் நடைபெற்றன.
ஆனால் 2002 ஆம் ஆண்டு நோர்வே நாட்டின் மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க அரசிற்கும் இடையில் கைச்சாத்தாக்கிய சமாதான ஒப்பந்த காலத்தில், இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இணக்கம் நிலவிய காலப்பகுதியில் மாவீரர் தினம் நினைவுகூரப்பட்டது.
ஒப்பந்த காலத்தில் 2004 ஆம் ஆண்டு மாவீரர் தினத்தில் நடாளுமன்றத்தின் முன்பாக மாவீரர் தினம் தமிழ்தேசியக் கூட்டமைப்பினரால் சுடரேற்றி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
அரச தொலைக்காட்சியான ரூபவாகினி தொலைக்காட்சி 2002 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் தின நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்தது.
இரண்டாது முறையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்புடன் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய பின்னர் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் மாவீரர் தினம், இம்முறை மக்கள் அச்சமின்றி தமது பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தக்கூடிய நிலையை, தமிழ் தேசியக் ட்டமைப்பு ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.