முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பத்து ஆயிரம் ரூபா மேலதிகக் கொடுப்பனவுகள்!

689 0
 

இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்துக்கு மேலதிகமாக 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு கடந்த ஒக்ரோபர் மாதத்திலிருந்து வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

262 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மரணமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனைவிமார் 220 பேரும் ஓய்வூதியத்தைப் பெற்று வருகின்றனர். இவர்களுக்குக் கடந்த மாதம் தொடக்கம் மேலதிகமாக 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இதனால் அரசுக்கு 2 கோடி 62 லட்சம் ரூபா மேலதிகச் செலவு ஏற்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர்கள் இந்த ஓய்வூதியத்தைப் பெறுவதற்குத் தகுதி வாய்ந்தவர்களாவர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.

அமைச்சரவை முடிவுக்கமையவே இந்த மேலதிக 10 ஆயிரம் வழங்கப்படுகிறது. பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது குறைகளைச் சபாநாயகருக்கு எடுத்துக் கூறியிருந்தனர். அத்துடன் தமக்குக் குறைந்தளவு ஓய்வூதியமே வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்தனர்.சபாநாயகர் இதனை அரசிடம் தெரிவித்ததை அடுத்தே, அமைச்சரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment