எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வௌியிடப்படும் பொய்யான தகவல்கள் குறித்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறையிடப்பட்டுள்ளதாக, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, மீண்டும் நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, பொய்யான தகவலை, இணையத்தளம் மற்றும் குறுந்தகவல்கள் மூலம் பரப்புபவர்கள் குறித்து ஆராயுமாறு, தாம் முறையிட்டுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது பெற்றோலுக்கோ டீசலுக்கோ தட்டுப்பாடு ஏற்படவில்லை எனவும், மக்கள் இது குறித்து ஒருபோதும் குழப்பமடையத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் இரண்டு வாரங்களில் மேலும் மூன்று கப்பல்கள் இலங்கை வரவுள்ளதாகவும், அதன் பின்னர், நிலவும் கேள்வியைவிட அதிக எரிபொருள், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் எனவும், அர்ஜூன தெரிவித்துள்ளார்.