நாட்டின் அரச தலைவராக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி மூன்றாண்டுகள் நிறைவுபெறவுள்ளது.
இந்த மூன்று வருட காலப்பகுதிக்குள் கூட்டு அரசின் நிர்வாகத்தில் தமிழ்மக்கள் நிம்மதியாக வாழ்ந்தார்களா? என்ற வினாவுக்கு இல்லை என்றுதான் பதில் கூற முடியும்.
மைத்திரி அரசு தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே தந்து கொண்டிருக்கின்றது என்பதே இன்றைய யதார்த்த உண்மை.
கூட்டு அரசின் ஆட்சியும் மகிந்தவைப் போன்றதே
மைத்திரியின் கூட்டு ஆட்சியில் தமிழ் மக்களுக்கு எதிராக பல்வேறு சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. மகிந்த ராஜபக்ச அரசின் காலத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்ததைப் போலவே மைத்திரி அரசிலும் அவை தொடருகின்றன.
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள், தளபதிகளின் கைதுகள், மத்திய கிழக்கு நாடுகளில் வேலை வாய்ப்புக்காகவும் புலம் பெயர்ந்தும் வாழ்பவர்கள் சுதந்திரமாக கட்டுநாயகக்க விமான நிலையம் ஊடாகப் பயணிக்க முடியாதநிலை என்பன தற்போதும் நிலவுகின் றன.
மத்திய கிழக்கு நாடுகளில் வேலைவாய்ப்புக்காகச் சென்றவர்களும் ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்பவர்களும் நாடு திரும்பிய சந்தர்ப்பங்களில் கடந்த ஆட்சியில் இடம்பெற்றதைப்போல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நான்காம் மாடியிலும் ஏனைய சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மைத்திரி நாட்டின் அரச தலைவராகப் பதவியேற்று மூன்று மாதகாலப்பகுதிக்குள் இடம்பெற்ற சம்பவங்களிலிருந்து ஆரம்பமாகி, படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளைஞர்கள் படுகொலை செய்யப்படுகின்ற சம்பவங்கள் இன்றைய அரசின் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தமிழ்மக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களாகவேயுள்ளன.
தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தலாக அரச படையினர் உள்ளனர்
யாழ். குடநாட்டில் பொலிஸார், இராணுவம், விசேட அதிரடிப்படையினரின் பிரசன்னம் ஆகியன தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது. சிவில் நடவடிக்கைகளுக்குள்ளும் அவர்களின் தலையீடுகள் பெருமளவில் இடம்பெறுகின்றன.
அவசரகாலச் சட்டத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டு கூட்டு அரசு இணக்க ஆட்சி, தேசிய ஆட்சி, என்றெல்லாம் வியாக்கியானம் பேசுவதன் மூலம் முழு உலகத்தையே ஏமாற்றி வருகின்றது.
மகிந்த ஆட்சியின்போது தமிழ்ப் பிரதேசங்களில் நிலவிய பாரதூரமான சிரம நிலமைகளில் எதையுமே ஒரு முடிவுக்கு இன்றைய கூட்டு ஆட்சி கொண்டு வரவில்லை என்ற கடும் விமர்ச னங்களை பன்னாட்டு தரப்புக்கள் பல கோணங்களில் முன்வைத்து வருகின்றன.
தமிழ்மக்களும் பலதரப்பட்ட தமது நியாயமான கோரிக்கைகளோடு வீதிகளில் நின்று அறவழிப் போராட்டங்களை இன்று வரை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
இராணுவக் கெடுபிடிகளில்இருந்து இன்னமும் விடுபடாத நிலையிலும், சுத்தமான நிலத்தடி நீரைக்கூடத் தமது சொந்தக் கிணறுகளில் இருந்து பெற்றுக் கொள்ளமுடியாத சூழ்நிலையிலும் தமிழ்மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இராணுவ முகாம்களைக் குறைப்பது, படையினரின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து கூட்டாட்சி அரசு எள்ளவேனும் சிந்திப்பதும் இல்லை.
அரசியல் கைதிகளுக்கு விடிவில்லாத நிலை
சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகள் கடந்த மூன்று வருட காலத்தில் பொது மன்னிப்பு வேண்டித் தங்களது உணவு ஒறுப்புப் போராட்டங்களை நடத்தியிருந்தாலும், கூட்டு அரசினால் அவர்களின் விடுதலை சம்பந்தமாக துரிதமான நடவடிக்கையெடுக்க இயலாது போயுள்ளது.
படைத்தரப்பினால் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் சரணடைந்த புலிகளின் முக்கியஸ்தர்களுக்கு என்ன நடந்தது? காணாமல் போனோர்களின் உறவுகள் அவர்களைக் கண்டறிந்து தருமாறு வேண்டி மகிந்த அரசிடமும் உரத்துக் குரல் கொடுத்தமை போன்றே மைத்திரி அரசிடமும் கோரிக்கை முன்வைத்து இரவு பகலாக பல போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் கூட்டு அரசு அவர்களது கோரிக்கைகளுக்கு எந்தவிதமான பதிலையும் உறுதியாகத் தெரிவிக்காது ஏமாற்றி வருகின்றது.
தலைமை அமைச்சரின் பொறுப்பற்ற பதில்
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க முன்னர் ஒரு தடவை ‘‘காணாமல் போனோர்கள் என்று கருதப்படுபவர்கள் வெளிநாடு தப்பிச்சென்றிருக்கலாம்’’ என்று பொறுப்பற்ற விதத்தில் பதில்கூறி காணாமல் போனோர்களின் உறவுகளின் மனதில் ஆழமான காயங்களை ஏற்படுத்தியிருந்தார்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ்மக்களின் பூர்விகமான நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்களும், புத்தர் சிலைகளை நிறுவுதலும், பௌத்த விகாரைகளை நிறுவுவதிலும் மைத்திரியின் ஆட்சியிலும் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகின்றன.
இராணுவத்தினரின் பக்கபலமும், ஆதரவும் அவற்றுக்கு முழுமை யாகக் கிடைக்கின்றன.
வடகில் தலைதூக்கும் பௌத்த கலாசாரம்
யாழ்ப்பாணத்துக்கான முக்கிய நுழைவாயிலான நாவற்குழியில் பௌத்த விகாரை நிறுவும் முயற்சி யில் அரசு ஈடுபட்டு வருகின்றது. இராணுவத் தளபதியான ஒருவர் இதற்கான அத்திபாரக்கல்லை நட்டுவைத்துள்ளார்.
நயினாதீவு கடற் பரப்பில் மிக உயரமான புத்தர் சிலையை நிறுவுவதற்கான பெரு முயற்சிகளை நயினாதீவு பௌத்த விகாரையின் பீடாதிபதி செய்து கொண்டிருக்கின்றார்.
திருக்கேதீஸ்வரத்தில் புத்தர்சிலை ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கையும் பௌத்த கலாசாரமாக மாற்றியமைக்கின்ற திட்டத்தில் மைத்திரி அரசு தானும் சளைத்தது அல்ல என்பதையும், தனது பௌத்த சிங்கள மேலாதிக்க நிலைப்பாட்டால் மற்றவர்களுக்கு நிரூபித்து வருகின்றது.
அரச தலைவரும் இந்த விடயத்தில் நேரடியாகத் தலையிட்டு அவற்றை தடுத்து நிறுத்த இயலாத கையறு நிலையில் உள்ளார்.
போர் முடி வுற்று எட்டு ஆண்டுகள் முடிவ டைந்ததும் தங்கள் பூர்வீக நிலங்களுக்குத் திருப்பிச் சென்று நிம்மதியான வாழ்க்கையைத் தொடரமுடியாது இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தவிக்கின்றனர்.
போர் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் கழிந்தும், போரினால் பாதி।க்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் எந்த வித முன்னேற்றத்தையும் காண, ஏற்படுத்த முடியவில்லை.
குறிப்பாக வன்னிப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் போர் நடவடிக்கை காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்க தாகும்.
பாதிக்கப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியாகவோ, வேறு வழிகளிலோ முன்னேற்றுவதற்கான மார்க்கங்கள் போதுமான அளவு இல்லாத நிலையே தொடர்ந்து வருகின்றது.
போர் முடிந்த பின்னர் ஏற்பட்ட அமைதியைத்தவிர வேறு எதனையும் காணமுடியாது தமிழ் மக்கள் வெறுப்புற்றுள்ளனர். தமிழ்ப் பகுதிகளுக்கு அரச தலைவர் தொடக்கம் சகல அமைச்சர்களும் அடிக்கடி வந்து செல்கின்றனர்.
ஆனால் இவர்களில் எவராலும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கமுடியவில்லை.
தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினையேனும் கூட்டு அரசால் தீர்க்கப்படவில்லை
இன்றைய மைத்திரி – ரணில் கூட்டு அரசிலும் தமிழ்மக்கள் தொடர்ச்சியாகப் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளான நிலையில் அதிலிருந்து மீள முடியாதவர்களாக இருந்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படாமல் இருப்பதனால் அவர்கள் இந்த அரசின் மீது அதிருப்தி யுடனும் பெரும் மன உளைச்சல்களுடனும் காணப்படுகின்றனர் என்று சுட்டிக் காட்டப்படுகின்றது.
போர் காரணமாக அங்கவீனமடைந்தவர்கள், விதவைகள், போராளி களின் குடும்பங்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள் போன்றவர்களின் பிரச்சினைகள் இன்றும் துன்பகரமானதாகவே இருக்கிறது.
குறைந்த பட்சம் தமிழ்மக்களின் இன்றைய அடிப்படைப் பிரச்சினை களையேனும் கூட்டு அரசு தீர்த்து அவர்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முன்வராதமை தமிழ் மக்கள் மத்தியில் மைத்திரி அரசு மீதான நம்பிக்கையை சிதறடித்து வருகின்றது.
கடந்த வருடம் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்டு வந்த தென் னிலங்கையைச் சேர்ந்த மீனவர்க ளிடம் தகவல் சேகரிக்கச் சென்ற அப்பகுதி கிராம அலுவலர் குறித்த மீனவர்களால் தாக்கப்பட்டிருந்தார்.
மீனவர்களின் தகவலையடுத்து அவ்விடத்துக்கு விரைந்து வந்த இராணுவத்தினர் குறித்த கிராம அலுவலரை மிகவும் தரக்குறைவாக நடத்தியிருந்தனர்.
இராணுவப் பிரசன்னம் முல்லைத்தீவில் அதிகம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களில் இருவருக்கு ஒரு இராணுவச் சிப்பாய் என்ற அடிப்படையில் இராணுவப் பிரசன்னம் அதிகரித்துள்ளது என்று வடக்குமாகாணசபை உறுப்பினரான வ.ரவிகரன் வடக்கு மாகாணசபையின் 108ஆவது அமர்வின்போது சுட்டிக் காட்டியிருந்தார்.
வடக்கில் சிவில் நிர்வாகமா? அல்லது இராணுவ ஆட்சியா நடைபெறுகின்றது என கடந்த வருடம் எப்ரல் மாதத்தில் வடக்கு மாகாணசபையில் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கொக்குவில் காங்கேசன் துறைவீதியில் இரவு நேரம் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.
அண்மையில் வடமராட்சியில் ஒரு இளைஞனும், அரியாலையில் மற்றுமொரு இளைஞனும் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அரியாலை மணியம் தோட்டப்பகுதியில் சுட்டுக்கொல்லப் பட்ட இளைஞரின் சாவு சம்பந்தமாக விசேட அதிரடிப்படையினர் மீது பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படையினரையோ, முகாம்களையோ எக்காரணம் கொண்டும் வடபகுதியில் இருந்து அகற்றமுடியாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜய வர்த்தனவும், வடக்கு– கிழக்கில் இருந்து இராணுவ முகாம்களை துரித கதியில் அகற்றுவது பொருத்தமற்ற விடயம் என இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவும் ஒக்டோபர் மாத இறுதியில் தெரிவித்திருந்தனர்.
கடும்போக்கு இருந்தால் நல்லிணக்கம் ஏற்படாது
அரசைப் பொறுத்த வரையில் தமிழர் விவகாரம் தொடர்பில் இத்தகைய கடும் போக்குகளே தொடர்ந்து கொண்டிருப்பதனால் உண்மையான நல்லிணக்கம் எப்படி ஏற்படும்? தமிழ்தேசியக் கூட்டமைப்பி னர்களும் இந்தப் பிரச்சினைகள் சம்பந்தமாகப் பல தடவை நாடளுமன்றத்தில் எடுத்து விளக்கியி ருந்தனர்.
மைத்திரி தலைமையிலான கூட்டு அரசு தமிழ்மக்களுடன் புரிந்துணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென அரச தலைவராகப் பதவியேற்றபின்னர் மைத்திரி தெரிவித்திருந்தார்.
அப்போது பன்னாட்டுச் சமூகம் அதனைப் பாராட்டியிருந்தது. ஆயினும் அவர் வழங்கிய அந்த உறுதிமொழிகள் இன்றுவரை செயல்வடிவம் பெறவில்லை. தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளுக்கப்பால் தமது அடிப்படை உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர்.
ஆனால் இவற்றில் எதுவும் நிறைவேறாத தொன்றாகவே இருக்கின்றது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இன்று எவர் மீது நம்பிக்கை வைப்பது என்று தெரியாத நிலையில் தர்மசங்கடத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர். மொத்தத்தில் கூட்டு அரசும் தமிழ் மக்களுக்கு வேட்டு அரசாகவே மாறியுள்ளது.