யாரும் எதிர்பார்க்காத மாற்றத்தை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நீதிமன்ற கட்டமைப்பில் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துவருகின்றேன். அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பாரியளவில் வழக்குகள் குவிந்திருக்கின்றன என நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
இரத்தினபுரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
சட்டமா அதிபர் திணைக்களம், சட்டவாக்க திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆகியவற்றின் ஊடாக இடம்பெறும் சேவைகள் தொடர்பாக அதிகமானவர்கள் அறியாமல் இருக்கின்றனர். கடந்த 10வருடங்களாக இந்த நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் சேவை செய்துவரும் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எந்த நன்மையும் கிடைத்ததில்லை. அதனால் அவர்கள் மன திருப்தியுடன் பணியாற்றக்கூடிய சூழலை நாங்கள் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும்.
மேலும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இன்று பாரியளவில் வழக்குகள் விசாரணைக்காக குவிந்து காணப்படுகின்றன. அதற்காக போதுமான சட்டத்தரணிகள் இந்த திணைக்களத்தில் இல்லாத நிலை காணப்படுகின்றது. சுமார் 200 சட்டத்தரணிகளே இருக்கின்றனர். அதிகமானவர்கள் இவர்களின் சேவையை மதிப்பதில்லை. அத்துடன் பொலிஸாரும் தங்களால் தீர்க்கக்கூடிய பிரச்சினைகளையும் தங்களை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கின்றனர்.
சிறுவர் துஷ்பிரயோக, பெண்கள் வன்முறை வழக்குகளே அதிகம் காணப்படுகின்றன. இவற்றை முறையாக தீர்க்கவேண்டும். ஒரு இரவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முடியாது.
அத்துடன் வழக்குகள் தாமதமடைவது தொடர்பாக பாரியளவில் பேசப்பட்டு வருகின்றது. இதுதொடர்பாக பாரிய குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. இதற்காக மரண விசாரணை அதிகாரிகளின் ஒத்துழைப்பை எவ்வாறு பெற்றுக்கொள்வது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம் என்றார்.