கிளிநொச்சி மாவட்த்தில் தற்போது என்றுமில்லாத அளவு வறுமைக்கு மக்கள் முகம் கொடுத்துள்ளனா். வறுமையை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மேம்பாட்டுக்கு அதிகார தரப்பினர்களிடம் எவ்வித மாற்றுத் திட்டங்களும் இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளருமான மு. சந்திரகுமாா் தெரிவித்துள்ளாா்.
பச்சிலைப்பள்ளி இத்தாவில் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் உரையாற்றும் போதே அவா் இதனை குறிப்பிட்டுள்ளாா். அங்கு அவா் மேலும் தெரிவிக்கையில்
கிளிநொச்சி மாவட்ட மக்களின் மிகப் பிரதான பிரச்சினையாக அமைந்துள்ளது வறுமையாகும், இடப்பெயர்வு மீள்குடியேற்ற காலங்களை விட இப்போது போதிய வருமானம் இன்மையால் வறுமை மிக மோசமடைந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
முக்கியமாக இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இன்று பலர் தொழில் வாய்ப்புக்களுக்காக தென்னிலங்கை நோக்கி சென்று அளெகரியங்களையும், நெருக்கடிக்களையும் எதிர்நோக்கியுள்ளனா். இதுவொரு ஆரோக்கியமான நிலைமை அல்ல. இந்த நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது மக்களினால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் கடப்பாடு. இதற்காகவே மக்கள் அவா்களுக்கு அதிகாரத்தை கொடுத்துள்ளனா்
எங்கள் சமூகத்தில் என்றுமில்லாத அளவுக்கு பெண்த் தலைமைத்துவக் குடும்பங்கள், மாற்றுவலுவுள்ளோர் குடும்பங்கள், தங்கள் பிள்ளைகளை யுத்தத்தில் பலிகொடுத்தவா்களின் குடும்பங்கள் என்பன பெரும் வாழ்வாதார நெருக்கடிகளை சந்தித்துள்ளனா். இந்தக் குடும்பங்களுக்கு சமூர்த்தி திட்டம் போன்று நிரந்தரமான வாழ்வாதார உதவிக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் இது தொடர்பில் சமூர்த்திக்கு பொறுப்பான அமைச்சர் எஸ்பி. திஸ்ஸநாயக்கவின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளேன். எனத் தெரிவித்த சந்திரகுமாா்
இதேவேளை யுத்தத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் விவசாயம், மீன்பிடி, என்பவற்றை அடிப்படையாக கொண்டவையாகும் இதனை அடிப்படையாக கொண்டு பிரதேச ரீதியாக தொழில் வாய்ப்புக்களை வழங்க கூடிய வகையில் தொழில் மையங்களை உருவாக்க வேண்டும் இதன் மூலம் இளம் சமூகத்தின் வேலையில்லாப் பிரச்சினைகளை ஓரளவுக்கேனும் தீர்க்க முடியும் எனவும் குறிப்பிட்டாா்