சிறிலங்காவின் புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்தும், போருக்குப் பின்னரான நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பிலும் நாம் தீவிர கவனம் செலுத்தி வருகின்றோம்.
2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சி அரசின் மூலம், அனைத்து இன மக்களுக்குமான சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று நினைக்கிறோம்.
போருக்குப் பின்னரான அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை மேற்கொள்ள வேண்டியவைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அமெரிக்கா ஆலோசனை வழங்கி வருகின்றது.
இவ்வாறு அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் தோமஸ் சானொன் தெரிவித்தார்.
இலங்கை வந்துள்ள உதவிச் செயலர் தோமஸ் சானொன், இலங்கை அயலுறவுத்துறை அமைச்சின் செயலர் பிரசாத் காரியவசத்துடன் பேச்சு நடத்திய பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
நல்லிணக்கம், பொதுப் பாதுகாப்பு அபிவிருத்திச் செயன்முறை தொடர்பில் ஆராய இலங்கைப் பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், நல்லிணக்கச் செயற்பாடுகள், கடல் பாதுகாப்பு, வெளிநாட்டுக் கொள்கை போன்ற பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்திருந்தோம்.
இலங்கையின் அபிவிருத்திக்காகவும் பாதுகாப்பு நடவடிக்கைக்காகவும் 21 மில்லியன் டொலர்களை வழங்கியிருந்தோம்.
போருக்குப் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட நல்லிணக்கச் செயற்பாடுகள் மற்றும் நீதிப் பொறிமுறை தொடர்பில் அமெரிக்கா அதிகம் கவனம் செலுத்துகிறது.
இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்கம், சட்ட விதிமுறை மற்றும் நீதித்துறை சீர்திருத்த முயற்சிகளுக்கிணையாக, இருதரப்பு பாதுகாப்புப் பிரிவு ஒத்துழைப்பும் தொடரப்படவுள்ளது.
கண்ணிவெடிகளை அகற்றுதல், கூட்டு இராணுவ ஈடுபாடுகள், இலங்கை அதிகாரிகளுக்கான மனித உரிமைகள் பயிற்சி, கப்பல்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் வருகை ஆகியவற்றுக்கான ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவு ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
உலகளாவிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத குழுக்கள் தொடர்பான தமது கரிசனையை இலங்கையும், ஐக்கிய அமெரிக்காவும் பகிர்ந்து கொண்டுள்ளன.
வடகொரியாவின் ஏவுகணைத் திட்டங்களினால் பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்தும், வட கொரியா மீது அனைத்து ஐக்கிய நாடுகள் உறுப்பினர்களும் அழுத்தம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் ஆராயப்பட்டது என்றார்.