திவுலுப்பிட்டி, ஹேன்பிட்டகெதர பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கும் பாதாள உலக குழுவொன்றுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட் டுச் சம்பவத்தை அடுத்து கைதுசெய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ரந்தீர் ரொட்றிக்கோ தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிமுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பிரபல பாதாள குழு உறுப்பினரான நாவலகே குஷான் தட்சில குரே கொல்லப்பட்டிருந்தார்.
சம்பவத்தை அடுத்து மேல் மாகாண சபை உறுப்பினர் ரந்தீர் மற்றும் அவரது மனைவி உட்பட எட்டுப் பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். மேல் மாகாண சபை உறுப்பினரின் வீட்டிலிருந்து 115 தோட்டாக்களும் குண்டுதுளைக்காத அங்கி, வெடிபொருட்கள், கைத்துப்பாக்கி வைக்கப்படும் கூடு, வாள் போன்ற பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கைதான எட்டுப் பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மேல் மாகாண சபை உறுப்பினரான ரந்தீர் மீது உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.