முடிந்தால் மூன்று நாட்களுக்கு மேலான பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்துக் காட்டுங்கள் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க சவால் விடுத்துள்ளார்.
சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தினை முன்னிட்டு பத்தரமுல்லவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சைட்டம் மருத்துவக் கல்லூரியானது சட்டங்களுக்கு உட்பட்ட வகையிலேயே நிறுவப்பட்டுள்ளது. ஆகவே அந்தக்கல்லூரியானது மருத்துவப் பட்டங்களை வழங்குவதை யாராலும் நிறுத்தமுடியாது. அவ்வாறு மருத்துவ கற்கைகளை கற்று பட்டம் பெற்றவர்களை பதிவு செய்வது குறித்த தீர்மானத்தினை அமைச்சர் தனது தனிப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக மேற்கொள்ள முடியும்.
தற்போதைய அரசாங்கம் ஜனநாயக நடைமுறைகளுக்கு அமைவாக சுமுகமான தீர்வொன்றை பெறுவதற்கு முயற்சிக்கின்றது. அவ்வாறிருக்கையில் தான் இவ்வாறான எதிர்ப்புக்கள் வெளியிடப்படுகின்றன. நான் சுகாதார அமைச்சராக இருந்திருப்பேனானால் இப்போது பட்டம் பெற்ற மருத்துவர்கள் பதிவுசெய்யப்பட்டு பணியில் ஈடுபட ஆரம்பித்திருப்பார்கள்.
அத்தகைய அதிகாரம் அமைச்சருக்கு உள்ளது. அவ்வாறிருக்கையில் அமைச்சர் ராஜித, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்ப்பதற்கு முயற்சி செய்கின்றார்கள்.
இந்த நாட்டில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட முடியாதவர்களில் பிரதானமான வர்களே வைத்தியர்கள். அவர்கள் ஏழு தினங்களும் பணிபுரிய வேண்டியவர்கள். அவ்வாறான நிலையில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவார்களாயின் அவர்களை மக்கள் பார்த்துக்கொள்வார்கள். அவர்களின் தாயார்களையும், பிள்ளைகளையும், வீடுகளையும் கூட மக்கள் பார்த்துக்கொள்வார்கள். மூன்று நான்கு நாட்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவார்களாயின் அதன் விளைவை அவர்கள் அறிய முடியும்.
சைட்டம் மருத்துவக் கல்லூரியை மூடுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. நான் அமைச்சராக இருக்கும்போதுதான் வர்த்தமானி அறிவித்தலை விடுத்து நிருவாகத்திற்கான அதிகாரத்தினை வழங்கினேன். இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து மருத்துவ கல்லூரிகளை இலங்கையில் நிறுவுவதற்கு முயற்சி களை எடுத்திருந்தேன். இருப்பினும் இதில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக அதில் தாமதம் ஏற்பட்டு விட்டது. இவ்வாறான மூன்று, நான்கு மருத்துவ கல்லூரிகள் நாட்டுக்கு அவசிய மானவையே என்றார்.