கென்யாவில் அரசியல் குழப்பம்: சுப்ரீம் கோர்ட்டுக்கு போலீஸ் ‘சீல்’ வைப்பு

220 0

கென்யாவில் தேர்தலில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக சுப்ரீம் கோர்ட்டுக்கு போலீசார் திடீரென ‘சீல்’ வைத்தனர்.

கென்யா நாட்டில் கடந்த ஆகஸ்டு மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அதிபர் உஹூரு கென்யட்டா வெற்றி பெற்றார். ஆனால் அந்த தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, உஹூரு கென்யட்டா வெற்றி பெற்றது செல்லாது என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.

இதனால் அரசியல் குழப்பம் உருவானது. இதையடுத்து இன்று (26-ந் தேதி) மறு தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தேர்தலை புறக்கணிக்கப்போவதாக எதிர்க்கட்சி தலைவர் ரைலா ஒடிங்கா அறிவித்தார்.

இதற்கிடையே இந்த தேர்தலுக்கான ஆயத்த வேலைகளை தேர்தல் வாரியம் சரியாக செய்து முடிக்கவில்லை என்பதால் தேர்தலை இப்போது நடத்தாமல் தாமதப்படுத்த வேண்டும் என்று கூறி, மனித உரிமைகள் ஆர்வலர் கெலிப் கலிபா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

அந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நேற்று விசாரிக்க தயாரானபோது, கோர்ட்டுக்கு போலீசார் திடீரென ‘சீல்’ வைத்தனர். சுப்ரீம் கோர்ட்டு அமைந்துள்ள சாலையில் யாரும் நுழைய முடியாதபடிக்கு தடுப்பு வேலிகளை போலீசார் அமைத்துள்ளனர். அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

Leave a comment