நிலவேம்பு கசாயத்தால் பக்க விளைவு ஏற்படாது: சித்த மருத்துவர் விளக்கம்

458 0

நிலவேம்பு கசாயம் குடித்தால் எவ்வித பாதிப்பும் பக்க விளைவும் ஏற்படாது என்று சித்த மருத்துவ நிபுணர் சிவராமன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்ததால் அவற்றை கட்டுப்படுத்த நிலவேம்பு கசாயம் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் இலவசமாக வழங்கி வருகிறது.

சித்தா மருந்தான நிலவேம்பு குடிநீர் அரசு ஆஸ்பத்திரிகளில் வைக்கப்பட்டுள்ளது.

இது தவிர பொதுமக்கள் கூடும் பஸ் நிலையம், ரெயில் நிலையம், உள்ளிட்ட பல இடங்களிலும் நிலவேம்பு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனை காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி காய்ச்சல் இல்லாதவர்களும் குடிக்கலாம்.

தொடர்ந்து 3 நாட்கள் குடித்தால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகமாகி காய்ச்சல் தொற்று ஏற்படாது என்று சித்த மருத்துவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

தமிழக அரசின் நிறுவனமான டாம்ப்கால், மத்திய அரசின் கூட்டுறவு நிறுவனமான ‘இம்கால்’ ஆகியவற்றின் விற்பனை மையங்களில் நிலவேம்பு கசாயம் தயாரிக்கும் பவுடர் விற்பனை செய்யப்படுகிறது.

நிலவேம்பு கசாயம் குடித்தால் காய்ச்சலில் இருந்து தப்பிக்கலாம் என்ற விழிப்புணர்வு பொதுமக்கள் இடையே ஏற்படுத்தப்பட்டதால் சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் மக்கள் விரும்பி குடிக்க தொடங்கிவிட்டனர். பலர் வீடுகளிலும் நிலவேம்பு பவுடரை வாங்கி வைத்து காய்ச்சி குடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நிலவேம்பு கசாயம் குறித்து வதந்தி பரவி வருகிறது. அதில் உள்ள 9 மூலிகையில் ஒன்று மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்ற தகவல் மருத்துவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

பொதுமக்களிடம் நிலவேம்பு குறித்து தவறான தகவலை பரப்ப வேண்டாம். அவற்றை குடிப்பதினால் எந்த பாதிப்பும் வராது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து சித்தா மருத்துவரும் சித்தா, ஆயுர்வேத மருத்துவ மாநில உரிமைகள் வழங்கும் அதிகாரியுமான பிச்சையாகுமார் கூறியதாவது:-

நிலவேம்பு கசாயத்தில் 9 வகையான மூலிகைகள் அடங்கியுள்ளன. நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சம் வேர், சந்தனம், பேங்குடல், பார்படாகம், சுக்கு, மிளகு, போரை கிழங்கு ஆகிய 9 சேர்ந்த கூட்டு மருந்துதான் நிலவேம்பு கசாயம். இது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருந்து. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் கண்டுபிடித்த மருந்தாகும். மத்திய அரசின் மருந்து அழகு சாதன சட்டத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் உள்ள முதலாவது பட்டியலில் நில வேம்பு குடிநீர் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கும். அது தெரியாமல் பேசுகிறார்கள்.

சித்த மருந்துகளை பற்றி பேச அலோபதி மருத்துவர்களுக்கு உரிமை கிடையாது. நிலவேம்பு கசாயம் குடித்தால் எவ்வித பாதிப்பும் பக்க விளைவும் ஏற்படாது. மலட்டு தன்மை ஏற்படும் என்று எந்த அடிப்படையில் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. அதற்கான ஆதாரங்களை கொடுக்க வேண்டும். சித்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி நிலவேம்பு குடிநீர் குடிக்க வேண்டும்.

காய்ச்சல் உள்ளவர்கள் 3 வேளையும் 5 நாட்கள் குடிக்கலாம். காய்ச்சல் இல்லாதவர்கள் 3 நாளுக்கு ஒரு வேளை மட்டும் குடித்தால் போதுமானது. பெரியவர்கள் 50 மில்லியும், ஒரு வயது முதல் 11 வயதுடையவர்கள் 15 முதல் 20 மில்லி அளவும் குடிக்கலாம். ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது. 9 மூலிகைகள் அடங்கிய கூட்டு சுவையுடன்தான் வழங்க வேண்டும். தனி சுவையாக கொடுக்க கூடாது.

இந்த கசாயத்தை தயாரித்த 3 மணி நேரத்தில் குடிக்க வேண்டும். அதன் பிறகு அவை பயனற்றதாகி விடும். மீண்டும் புதிதாக கசாயம் தயாரிக்க வேண்டும், எனவே பொதுமக்கள் நிலவேம்பு கசாயம் குறித்து பயப்பட தேவையில்லை. தயக்கம் இல்லாமல் குடிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

சித்த மருத்துவ நிபுணர் சிவராமன் கூறியதாவது:-

நிலவேம்பு கசாயத்தில் இருக்கும் 9 மூலிகைகளில் 1 மூலிகையான நிலவேம்பை எடுத்து அந்த நிலவேம்பில் இருக்கக்கூடிய ஆர்க்கோ எக்ஸ்ட்ராக்ட்டில் அந்த எக்ஸ்ட்ராக்டை எலிகளில் சோதித்து பார்த்தோம் என்று கூறி தேவையில்லாமல் மலட்டுத் தன்மையை உண்டாக்கும் என்று பூதாரகரமாக ஒரு பொய்யான தகவலை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மெத்தனாலிக் எக்ஸ்டராக்டோ, ஆக்ரோ எக்ஸ்ட்ராகிடிலோ வரக்கூடிய ஆதாரத்தையும் 9 மூலிகைகளை வைத்து காய்ச்சுவதையும் ஒன்றுபடுத்தி பார்க்க கூடாது.இந்த கசாயம் மருத்துவ மருந்து. இதில் எந்தவிதமான ஆபத்தும் வராது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment