ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனனுக்கு பதில் புதிய வேட்பாளர்

7609 0

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வயது முதிர்ச்சி காரணமாக மதுசூதனனுக்கு பதிலாக புதிய வேட்பாளரை நிறுத்த எடப்பாடி பழனிசாமி அணி பரிசீலனை செய்து வருகிறது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 31-க்குள் நடத்தி முடிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. ஏற்கனவே இந்த தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு பண விநியோகம் காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இனி தேர்தல் எப்போது நடக்கும்? எப்படி நடக்கும்? என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால் மீண்டும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பரபரப்பு ஏற்பட்டுள்து. தேர்தல் களத்தை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

கடந்த முறை போட்டியிட்டு பணப்பட்டுவாடா பிரச்சினையில் சிக்கிய டி.டி.வி. தினகரன் மீண்டும் போட்டியிட போவதாக கூறி இருக்கிறார்.எனவே டி.டி.வி. தினகரனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி அணியில் போட்டியிட போவது யார்? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த முறை டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக எடப்பாடி பிரசாரம் செய்தார். ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக இருந்தார். இப்போது ஓ.பன்னீர்செல்வம் உள்ளே சென்றுவிட்டார். டி.டி.வி. தினகரன் வெளியே நிற்கிறார்.

எடப்பாடியும், ஓ.பன்னீர் செல்வமும் டி.டி.வி. தினகரனுக்கு எதிராக பிரசாரம் செய்ய போகிறார்கள். கட்சியும், முகங்களும் மாறவில்லை. காட்சி மாறி இருக்கிறது.

அவைத் தலைவராக இருக்கும் மதுசூதனன் கடந்த முறை டி.டி.வி.யை எதிர்த்து களத்தில் நின்றார். 76 வயதாகும் மதுசூதனன் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. 1991-ல் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றினார்.

50 வருடங்களுக்கும் மேலாக இந்த தொகுதியில் வசித்து வரும் மதுசூதனன் தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகம் ஆனவர். எனவே டி.டி.வி.யை எதிர்த்து போட்டியிட தகுதியானவர் என்று களம் இறக்கப்பட்டார். வயது காரணமாக சந்துபொந்தெல்லாம் சுற்றி வர சிரமப்படுவதால் இந்த முறை அவருக்குப் பதில் புதிய வேட்பாளரை எடப்பாடி அணி தேடி வருகிறது.

Leave a comment