மலையகத்தில் பல இடங்களில் மண் சரிவு – வீடுகள் சேதம்

229 0

தொடர் மழை காரணமாக பல பிரதேசங்களில் மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்து வீடுகள் சேதமடைந்துள்ளன. அந்தவகையில் அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரப்பத்தனை பகுதியில் 15ஆம் திகதி இரவு பெய்த கடும் மழையினால் கல்மதுரை தோட்டத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளன.

அத்தோடு அப்பகுதியில் உள்ள இரண்டு லயன்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மழை நேரங்களில் வீட்டில் தண்ணீர் கூரையிலிருந்து கசிந்து ஒழுகுவதனால் பல வீடுகள் இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றன. இதனால் மழை நேரங்களில் நித்திரை இன்றி மக்கள் அவதிப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மக்களிடம் சந்தா பணம் வாங்கும் தொழிற்சங்கங்களும் வேலை வாங்கும் தோட்ட நிர்வாகமும் ஓட்டு வாங்கும் அரசியல் வாதிகளும் அவர்களின் வாழ்க்கை முறை தொடர்பில் பாராமுகமாக இருந்து விடுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

பல லயன் அறைகளுக்குப் பின்னால் பெரிய மண் மேடுகள் காணப்படுவதனால் எந்நேரமும் தமக்கு ஆபத்து ஏற்படலாம் என அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மீண்டும் ஒரு மீறியபெத்தையாவதற்கு முன் தோட்டத்தொழிலாளர்கள் வாழும் பாதுகாப்பற்ற குடியிருப்புக்களை அகற்றி உடனடியாக தமக்கு பாதுகாப்பான இடங்களில் வீடுகளை அமைத்துத் தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a comment