தினகரனிடம் விசாரணை முடிந்தது: மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றது குற்றப்பிரிவு போலீஸ்

302 0

சென்னையில் டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனாவிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் 3 நாட்களாக நடத்திய விசாரணை முடிவடைந்ததையடுத்து, அவர்களை மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. அம்மா கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

தினகரனை 5 நாட்கள் காவலில் எடுத்த போலீசார், விசாரணைக்காக கடந்த வியாழக்கிழமை சென்னைக்கு அழைத்து வந்தனர். இன்று அவரிடம் மூன்றாவது நாளாக விசாரணை நடந்தது. இன்று மாலையுடன் விசாரணையை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் முடித்துக்கொண்டனர். பின்னர் அவரையும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.

தினகரனையும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் இன்று கொச்சி மற்றும் பெங்களூர் அழைத்து செல்ல போலீசார் திட்டமிட்டிருந்தனர். ஆனால் சென்னையில் நடந்து வரும் விசாரணையே 3 நாட்களை கடந்து விட்டது. எனவே அவர்களை கொச்சிக்கு அழைத்து செல்லும் திட்டத்தை போலீசார் கைவிட்டனர்.

இதற்கிடையே டி.டி.வி.தினகரனுக்கு வழங்கப்பட்டுள்ள 5 நாள் போலீஸ் காவல் திங்கட்கிழமையுடன் முடிகிறது. திங்கட்கிழமை அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். அப்போது, அவரது காவல் நீட்டிக்கப்படுமா? அல்லது ஜாமீன் வழங்கப்படுமா? என்பது தெரியவரும்.