சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறியல் (காணொளி)

290 0

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறியல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறியல், தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு துறை தலைமையகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில், சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரும் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளை, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி வரை இவர்களுக்கான விளக்கமறியல் நீடிப்பதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

2005ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திற்குள் வைத்து, நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இச்சம்பவத்தில் அவரது மனைவி உட்பட சிலர் காயமடைந்திருந்தமையம் குறிப்பிடத்தக்கது.