முகில்களைக் கிழித்து விண்ணைத்தொட்டது ‘அகரன்’ ஏவுகணை! ஈழத் தமிழர் ர.ரணேந்திரன் சாதனை!

654 0

ஈழத்தமிழரால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ‘அகரன்’ ஏவுகணை வெற்றிகரமாக முகில்களைக் கிழித்து விண்ணைத்தொட்டு சாதனை படைத்துள்ளது.தமிழீழத்தின் முல்லை மண்ணின் வாரிசான ரவிகரன்-ரணேந்திரன் என்பவரே இச்சாதனையை படைத்துள்ளார். இவர் விண் பொறியியல் ஆய்வுத்துறை மாணவனாக அமெரிக்காவில் கல்விகற்று வருகின்றார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்….

தொடர் செயற்திட்டங்களின் முதல் படிநிலையாக இந்த ஏவுகணைச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் இரவு பகலாக கடினமாக உழைத்து ‘அகரன்’ஐ உருவாக்கியுள்ளேன். இது ஒரு மாதிரி ஏவுகணை முயற்சியாகும்.இதைக்கொண்டு மிகவும் திறன்வாய்ந்த ஏவுகணை அளவுகளை எளிதில் உருவாக்கிடமுடியும். ஏவுகணையின் உந்துசக்தி தொடர்பில் நான் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நான் தேர்ந்தெடுத்த முறைமையால் இந்த ஏவுகணை மிகவும் வினைத்திறன் கொண்டதென ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இனிவரும் அடுத்தடுத்த செலுத்துகைகளில் பல அமைப்பு மாற்றங்கள் பேணப்படவுள்ளேன்.
செய்மதி அறிவியல்,வானூர்தி அறிவியல் ஆகியவற்றில் பல செயற்றிட்டங்கள் செய்தது போல இது ஏவுகணை அறிவியலில் உள்ளடங்குகிறது. இந்த முயற்சியில் 100% வெற்றி அடைந்தேன். இவ்வாறு ரவிகரன்-ரணேந்திரன் கூறியுள்ளார்.

‘அகரன்’ எனும் தமிழ்ப்பெயர் சுமந்து தமிழர் அறிவியலின் நீட்சியாக உருவாக்கப்பட்ட இவ் ஏவுகணை முகில்களைக் கிழித்து விண்ணைத் தொட்டதன் மூலம் தமிழர்களின் பெருமை நிலைநாட்டப்பட்டுள்ளது.

முந்தைத் தமிழ் மாமன்னர்களின் வீரம், விவேகம், அறிவாற்றல், ஆயுதப்பயன்பாடு போன்றவை கால சுழற்சியில் இடையறுந்து போயிருந்த நிலையில், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் சகாப்தம் அதனை நம் காலத்தில் நிதர்சனமாக்கியது.

பெரும் உலக வல்லரசுகளுக்கே சவாலாக விளங்கும் ஆயுத தயாரிப்பில் தமிழர் சேனை தலைவன் வழிகாட்டுதலில் உச்சம்தொட்டது. கையெறி குண்டில் ஆரம்பித்து ஏவுகணைகள் வரை தயாரிக்கப்பட்டது. கடல்புலிகள் பயன்பாட்டில் இருந்த அத்தனை சண்டைப் படகுகளும் சொந்தத் தயாரிப்பாகும். நீர்மூழ்கிப் படகுகளும் விமானங்களும் தமிழர் சேனையின் அறிவியல் ஆற்றலின் சிகரங்களாகும்.

தமிழர் சேனையின் பயன்பாட்டில் இருந்து விட்டுச்சென்ற மிச்ச சொச்சங்களை ஆயுதமௌனிப்பின் பின் உலக நாடுகள் வியப்புடன் பார்த்து வருவதுடன் ஆராய்ச்சியும் செய்கிறார்கள்.

தமிழர்களின் தேசமாக தமிழீழம் தலைவர் பிரபாகரன் தலைமையில் அமையும் போது தமிழர் பெருமை அனைத்து தளங்களிலும் வெளிப்படுவது திண்ணம். அதுவரை நாம் காத்திருக்காது எம்மால் முடிந்தவரை எமக்குள் இருக்கும் ஆற்றல்களை வளர்த்து அந்ததந்தத் தளங்களில் எம்மை செதுக்கிக்கொள்வோம்.

உலக வல்லரசான அமெரிக்க மண்ணில் இருந்து தமிழர்களுக்கு தலைநிமிர்வை ஏற்படுத்தியிருக்கும் ரணேந்திரன் வேறுயாருமல்ல, வடமாகாண சபை உறுப்பினரான துரைராசா ரவிகரன் அவர்களின் மகனே.ரவிகரன்-ரணேந்திரன் அவர்களைப் போன்று பலர் தத்தமது திறண்களினூடே உலகளவில் தமிழர்களின் பெருமையை நிலைநாட்டிவருகின்றார்கள். காலம் கைகூடி வரும்போது ஒருமுகப்படுத்தப்பட்டதாக தமிழர் பெருமை வெளிப்படுவது திண்ணம்.

மென்மேலும் வெற்றிகளை வசமாக்கி துறைசார்ந்த தேர்ந்த நிபுனராக வளர்ந்து தமிழீழத்திற்கும் தமிழர்களுக்கும் பெருமைசேர்க்க வாழ்த்துவோம்.