அ.தி.மு.க. ஆட்சி அமைய சசிகலா தான் காரணம் எனவும் சசிகலா பற்றி தனது சொந்த கருத்தை மனசாட்சிபடி கூறியதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா கருமாத்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ்குமார் கைகளை கட்டிக் கொண்டு 122 கி.மீ. சைக்கிள் ஓட்டி கின்னஸ் சாதனை படைத்தார்.
இதற்கான பாராட்டு விழா நடந்தது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு மாணவருக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.
விழாவில் அவர் பேசுகை யில், முடங்கி கிடந்தால் சிலந்தி கூட சிறைப்பிடிக்கும். முடிந்தவனுக்கு இமயம் கூட எட்டும் தூரம் தான். எனவே மாணவர் விக்னேசை போல் ஒவ்வொருவரும் முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை என்றார்.
அதன் பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அ.தி.மு.க. ஆட்சி அமைய சசிகலா தான் காரணம். சசிகலா பற்றி என் சொந்த கருத்தை மனசாட்சிபடி கூறினேன். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்து நலத்திட்ட பணிகளும் சிறப்பாக நடை பெற்று வருகிறது என்றார்.