பிரமாண்டமான தேசிய தமிழ் தின விழா வடமாகாணத்தில்

5829 0

வடமாகாணத்தில் முதன்முறையாக தேசிய தமிழ் தின விழா மற்றும் பாடசாலைகளின் கலாச்சார விழா 14ஆம், 15ஆம் திகதிகளில் பிரமாண்டமாக யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

மத்திய கல்வி அமைச்சும், ஐங்கரன் மீடியா சொலுஷன் நிறுவனம் இணைந்து நடத்தும் தேசிய தமிழ் தின விழா மற்றும் பாடசாலைகள் கலாச்சார விழாவில் 14ம் திகதி 1ம் நாள் நிகழ்வில் தேசிய தமிழ் தின போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் 9 மாகாணங்களினதும் ஆளுநர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக நிகழ்வின் ஒழுங்கமைப்பாளர்களால் கூறப்பட்டுள்ளது.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தமிழ் தின போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களை வழங்குவார்.

தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் கலை நிகழ்வுகள் மாலை 7 மணி வரையில் நடைபெறும.

இதனோடு தென்னிந்தியாவில் புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் சுகி சிவம் கலந்து கொள்ளும் பட்டிமன்றம் நடைபெறும்.

15ம் திகதி 2ம் நாள் நிகழ்வில் பாடசாலைகளின் கலாச்சார நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் நடைபெறும்.

அதனோடு தென்னிந்தியாவில் புகழ்பெற்ற பரதநாட்டிய அக்கடமியான ‘பாரத கலாஞ்சலி’ வழங்கும் ஓம் சிவா முருகா பரத நாட்டிய நிகழ்வும் நடைபெறும்.

இப் பரதநாட்டிய நிகழ்வில் 20ற்கும் மேற்பட்ட இந்திய பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும் வடமாகாணத்தில் திறம்பட செயற்பட்ட கலைஞர்கள், எழுத்தாளர்கள், விளையாட்டு

வீரர்கள், கல்விமான்கள், வியாபார துறையில் மிளிர்ந்தவர்கள் மற்றும் சிறந்த சேவையாற்றிய ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்கள்.

தொடர்ந்து தென்னிந்தியாவில் புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி கலந்து கொள்ளும் பட்டிமன்றும் நடைபெறவுள்ளது.

இதேவேளை ஆரம்ப நிகழ்வு உள்ளிட்ட சகல நிகழ்வுகளும் பிரமாண்டமான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப நிகழ்வுகளில் பிரதானமாக யாழ்.மத்திய கல்லூரியில் இருந்து யாழ்.இந்து கல்லூரி வரையில் பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

14ம், 15ம் திகதிகளில் நடைபெறவுள்ள நிகழ்வுகளில் சுமார் 300ற்கும் மேற்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

பொதுமக்கள் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ள இயலும் என்பதுடன் அனுமதி முற்றிலும் இலவசம்.

Leave a comment