ஜித்தா அரச அரண்மனை மீது துப்பாக்கிச்சூடு – 2 பாதுகாவலர்கள் பலி

352 0

சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா அரச அரண்மனை வாயிலில் பாதுகாப்புப்பணியில் இருந்தவர்கள் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.

சவுதி அரேபியாவின் மேற்கு கடற்கரை நகரமான ஜித்தாவில் பாரம்பரியமான அரச அரண்மனை உள்ளது. இந்த அரண்மனையில் நேற்று காலை, ஒருவர் அத்துமீறி நுழைய முயன்றுள்ளார். அவரை அரண்மனை வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளனர்.

இதையடுத்து, அந்த நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பாதுகாவலர்கள் உயிரிழந்தனர் எனவும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அந்நாட்டு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் ஈடுபட்டவரை போலீசார் சுட்டுக்கொன்றனர். அவர் சவுதி அரேபியாவைச் சேர்ந்த மன்சூர் அல்-அம்ரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து இந்த பகுதிக்கு செல்லும் அமெரிக்கர்கள் கவனத்துடன் இருக்குமாறு அந்நாட்டு தூதரகம் எச்சரித்துள்ளது.

Leave a comment