சிரியா: காவல் நிலையத்தில் இரட்டை தற்கொலைப்படை தாக்குதல் – 15 பேர் பலி

1941 0

சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள காவல் நிலையத்தில் இரண்டு தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள், போலீசார் உள்பட 15 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள காவல் நிலையத்தில் நேற்று நுழைந்த தீவிரவாதிகளில் ஒருவன் நிலையத்தின் வாயில் அருகிலும், மற்றொருவன் முதல் தளத்திலும் தங்களது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இந்த கோர தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் போலீசார் உள்ளிட்ட 15 பேர் பலியானதாக அந்நாட்டு உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

4 தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கூறியுள்ள அவர், கடந்த ஜூலை மாதத்திற்கு பிறகு தலைநகர் டமாஸ்கஸில் நடந்த முதல் தாக்குதல் இது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பலியானவர்களின் உடல்கள் அடையாளம் கண்டறியப்பட்டு வருவதாகவும், அதன் பின்னர் தீவிரவாதிகள் குறித்த விபரங்கள் தெரியவரும் என்றும் அவர் கூறினார்.

இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. எனினும், அந்நாட்டில் தற்போது சரிவை சந்தித்து வரும் ஐ.எஸ் இயக்கம் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a comment