முச்சக்கரவண்டியில் 13 மாணவர்கள் – விபத்தில் 8 மாணவர்கள் படுகாயம்

531 0

எல்பிடிய வலஹேன பிரதேசத்தில் இன்று மதியம் பாடசாலை மாணவர்கள் 13 பேரை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டியொன்று டிபர் ரக பாரவூர்தியொன்றின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 8 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று மதியம் 1.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த மாணவர்கள் எல்பிடிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த முச்சக்கரவண்டியில் பயணிக்கவிருந்த மேலும் இரண்டு மாணவர்கள் முச்சக்கரவண்டியில் இட பற்றாக்குறையால் அதில் பயணிக்கவில்லை என காவற்துறை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட நான்கு பேர் மேலதிக சிகிச்சைக்காக கராபிடிய போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு விபத்துக்குள்ளான மாணவர்கள் 7 முதல் 14 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அளவுக்கதிகமாக முச்சக்கரவண்டியில் மாணவர்களை ஏற்றிச் சென்றதே இந்த விபத்துக்கு காரணம் என காவற்துறை தெரிவித்துள்ளது.

 

Leave a comment