புலம் பெயர் தமிழ் மருத்துவர்கள் மூலம் முன்னாள் போராளிகளுக்கு பரிசோதனை

332 0

kuraமுன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்க வைத்தியர்களை விட புலம்பெயர் தமிழர்களே மிகவும் நம்பிக்கைக்குரியவர்கள் என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறியுள்ளார். சர்வதேசத்தில் பணிபுரியும் புலம்பெயர் தமிழ் வைத்தியர்கள் இருக்கும் நிலையில் நாம் அமெரிக்கர்களை நாட வேண்டிய தேவை கிடையாது என அவர் கூறியுள்ளார்.

வட மாகாணத்தில் இடம்பெறவுள்ள முதலீட்டாளர்களுக்கான மாநாடு தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றி போதே அவர் இதனை கூறியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், வட மாகாண முதலமைச்சரிடமும் தாம் இந்த யோசனையை முன்வைத்தேன். அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்க வில்லை என அவர் கூறியுள்ளார். முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டமை குறித்து ஆளுநர் என்ற வகையில் எவரும் என்னிடம் தனிப்பட்ட முறையில் முறைப்பாடுகளை முன்வைக்கவில்லை.

எனினும், ஊடகங்கள் வாயிலாகவே தான் இது தொடர்பில் தெரிந்துகொண்டேன். உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய மருத்துவ அதிகாரிகளால் மாத்திரமே இதன் உண்மைத் தன்மையினை ஆதாரபூர்வமாக நிருபிக்க முடியும். இதேவேளை, அரசாங்கம் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தயாராக உள்ளது அவர் மேலும் தெரிவித்துள்ளார்.