யாழ்ப்பாணத்தின் தீவுகளில் உள்ள மருத்துவமனைகளை நேரில் ஆராய தயார் – சுகாதார அமைச்சர் 

273 0
யாழ்ப்பாணத்தின் தீவுகளில் உள்ள மருத்துவமனைகளில் நிலவும் குறைப்பாடுகளை நேரில் வந்து ஆராய தயார் என சுகாதார அமைச்சர்
ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற சுகாதாரத்துறை தொடர்பான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் தீவகப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் நிலவும் குறைப்பாடுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்து கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன,
யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் இரண்டு நாள் பயணமொன்றை மேற்கொள்ள தாம் தயார் எனக் குறிப்பிட்டார்.
குறித்த தீவுகளில் உள்ள மருத்துவமனைகளின் குறைப்பாடுகளை ஆராய்ந்து, அவற்றுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கத் தயார் என்றும் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்ட மலையத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளும், மூடும் நிலைக்கு வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களை அபிவிருத்தி செய்ய விசேடமாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் கோரியுள்ளார்.
எனினும், பெருந்தோட்ட நிறுவனங்கள் சில மருத்துவமனைகளை பராமறிப்பதால், இந்த விடயத்தில் பிரச்சினை நிலவுவதாக சுகாதார பிரதி அமைச்சர் பைஸல் காஸிம் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Leave a comment