மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஏறாவூர் நன்காம் குறிச்சி, ஐந்தாம் குறிச்சி மற்றும் எல்லை நகர் கிராமங்களை, ஏறாவூர் நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் இணைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் கண்டித்து, செங்கலடியில் இன்று பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது
ஏறாவூர் நன்காம் குறிச்சி, ஐந்தாம் குறிச்சி மற்றும் எல்லை நகர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஏற்பாட்டில், ஏறாவூர் ஐந்தாம் குறிச்சியிலிருந்து மட்டக்களப்பு – திருமலை பிரதான வீதியூடாக பேரணியாக வந்த பொதுமக்கள், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரால் 09.08.2017 மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரது EP/04/E/01/01 இலக்க 10.08.2017 திகதி கடிதங்களின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, ஏறாவூர் நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலிருந்து செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இணைக்கப்பட்ட பகுதிகளை மீளவும் எந்தவித மாற்றமும் இன்றி 2016 ஆண்டுக்கு முன்னிருந்தவாறு நடவடிக்கையெடுக்குமாறு, மட்டக்களப்பு பிரந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குக் கடிதம் அனுப்பபட்டுள்ளது.
கிழக்கு மாகாண சுகாதர அமைச்சின் செயலைக் கண்டித்தும் தாங்கள் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினுடானே தொடர்ந்தும் இணைந்திருப்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் இறுதியில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை, செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி இ.சிறிநாத்திடம் கையளித்தனர்.