சென்னை பெசன்ட்நகரில் அமைக்கப்பட்ட ஆதரவற்றோர், ஏழைகள் பசியாற உணவளிக்கும் பெட்டகம்

8717 0

சென்னை பெசன்ட்நகரில் ஆதரவற்றோர், ஏழைகள் பசியாற உணவளிக்கும் பெட்டகம் அமைக்கப்பட்டுள்ளது.

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. ஆனால், தற்போது இந்தியாவில் ஒருவேளை உணவுக்கே வழியில்லாமல் கஷ்டப்படுபவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

இன்னொருபுறம் திருமணம் போன்ற விழாக்களின்போது ஏராளமான உணவு பொருட்கள் வீணடிக்கப்படுவதும் தொடர்ந்து வருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் முறையான திட்டமிடுதல் இல்லாமல் தங்களது தேவையைவிட மிகுதியாக உணவு தயாரித்து அதை பல நேரங்களில் வீணடித்து விடுகின்றனர்.

இதை தனது வீட்டில் மட்டுமின்றி, தனது உறவினர்கள், நண்பர்களின் வீட்டின் மூலமாகவும் அறிந்துகொண்ட 34 வயதான சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஐசா பாத்திமா ஜாஸ்மின், இதற்கு ஏன் ஒரு முடிவு கட்டக்கூடாது என்று எண்ணினார். அதன்விளைவு தான், சென்னை பெசன்ட்நகர் 4-வது மெயின்ரோட்டில் உள்ள ‘ஐயமிட்டு உண்’ என்ற உணவு பெட்டகம்.

இந்த உணவு பெட்டகத்தின் மூலம் தினந்தோறும் ஆதரவற்றோர், ஏழைகள் பலர் பசியாறி வருகின்றனர். ஆதரவற்றோருக்கு உதவ வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களது வீட்டில் மீதமான கெட்டுப்போகாத உணவுகளை பேக்கிங் செய்து இந்த உணவு பெட்டகத்தில் வைத்துச் செல்லலாம். இதுதவிர ஓட்டல்களில் இருந்தும் உணவுகளை வாங்கி வைக்கலாம்.

குளிர்சாதன வசதி கொண்ட இந்த உணவு பெட்டகத்தில் வைக்கப்படும் உணவை ஏழைகள், ஆதரவற்றோர் எடுத்துச்சென்று பசியாறலாம். இந்த உணவு பெட்டகத்தின் அருகே தனியாக ஒரு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. 5 சிறிய பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த பெட்டியில் தங்களுக்கு தேவைப்படாத ஆடைகள், புத்தகங்கள், பொம்மைகள், காலணிகள், பாத்திரங்கள், இதர பயனுள்ள பொருட்களையும் வைத்துச்செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 20-ந் தேதியில் இருந்து செயல்பட்டுவரும் இந்த உணவு பெட்டகத்தில் தினந்தோறும் ஏராளமானோர் தங்களது தேவைபோக மீதமான உணவுப்பொருட்களை வைத்து செல்கின்றனர். அவ்வாறு வைக்கப்படும் உணவுப்பொருட்களை தேவைப்படுபவர்கள் எடுத்துச்சென்று பசியாறுகின்றனர்.

இதுதவிர பெட்டியில் வைக்கப்படும் ஆடைகள், புத்தகங்கள், காலணிகள் போன்றவற்றையும் ஏழைகள் பலர் எடுத்துச்சென்று பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த உணவு பெட்டகம் காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை செயல்படுகிறது. இங்கு வைக்கப்படும் உணவு மற்றும் ஆடை போன்ற பொருட்கள் சரியானவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மாத சம்பள அடிப்படையில் காவலாளி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதவிர இங்கு ஒரு பதிவேடு பராமரிக்கப்படுகிறது. உணவுப்பொருட்களை கொண்டுவந்து வைப்பவர்கள் அந்த உணவின் தரம் பற்றி பதிவேட்டில் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி தாங்கள் கொண்டுவந்துள்ள உணவு எப்போது தயாரிக்கப்பட்டது, எத்தனை நாட்களுக்குள் அவற்றை உண்ணலாம் என்பது போன்றவற்றை பதிவு செய்கின்றனர்.

இங்கு நியமிக்கப்பட்டுள்ள காவலாளியும் அந்த உணவை பரிசோதித்து அது கெட்டுப்போகவில்லை என்று உறுதி செய்த பின்னரே பெட்டகத்துக்குள் வைக்க அனுமதிக்கிறார். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பொருட்கள் என்றால் காலாவதி தேதியை பார்த்து தான் பெட்டகத்தில் வைக்க அனுமதிக்கப்படுகிறது.

டாக்டர் ஐசா பாத்திமா ஜாஸ்மின்

இந்த உணவு பெட்டகம் அமைக்கப்பட்டதன் நோக்கம் குறித்து டாக்டர் ஐசா பாத்திமா ஜாஸ்மின் கூறியதாவது:-

இந்தியாவில் 40 சதவீத உணவுப்பொருட்கள் பயன்படுத்தப்படாமலே வீணடிக்கப்படுவதாகவும், இதன்மூலம் மட்டும் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வீணடிக்கப்படுவதாகவும் ஒரு புள்ளிவிவரத்தின் மூலம் அறிந்துகொண்டேன். ஒருவரது வீட்டில் மீதமாகும் உணவுப்பொருளை ஏழைகளை தேடி கொடுப்பது என்பது இயலாத காரியமாக உள்ளது. இதற்கு சோம்பேறித்தனமும் முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

ஒரு வீட்டில் ஒரு பாக்கெட் உணவு வீணாகிறதென்றால் 200 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 200 பாக்கெட் உணவு வீணாகும். இப்படி வீணாகும் உணவுப்பொருட்களால் மீத்தேன் போன்ற எரிவாயு உருவாகி சுற்றுச்சூழலும் பாதிக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு உணவுப்பொருட்கள் வீணாவதை தடுக்க இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறேன்.

உணவு பெட்டகத்தை அமைக்க ரூ.1 லட்சம் செலவு செய்துள்ளேன். யாரையும் எதிர்பார்க்காமல் எனது சொந்த செலவிலேயே இதை ஏற்படுத்தி உள்ளேன். லண்டன், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இதுபோன்ற திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்த திட்டத்துக்கு ஒத்துழைப்பு அளித்தால் தமிழகம் முழுவதும் இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்திவரும் பெண் டாக்டருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த பெட்டகம் வைக்கப்பட்டதில் இருந்தே ஏராளமானோர் தங்களது வீடுகளில் மீதமாகும் உணவுகளை இங்கு வைக்கத் தொடங்கி உள்ளனர். உணவு வீணாகாமல் இன்னொருவருக்கு சென்றடைகிறது என்பதை நினைத்து பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a comment