நுவரெலியா குப்பை மேட்டு விவகாரம்; மக்கள் ஆர்ப்பாட்டம்

282 0

நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பத்தனை நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குப்பை மேட்டு விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.

இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொதுவான குப்பை மேட்டில் அளவுக்கு அதிகமான குப்பைகளை நுவரெலியா பிரதேச சபை கொட்டி வருவதாகவும், இதனால் இப்பகுதியில் வசிக்கின்ற மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், கூறி இன்று (31) பத்தனை பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தை நுவரெலியா பிரதேச சபையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தினர்.

சுமார் 50ற்கும் மேற்பட்ட நகர வர்த்தகர்கள் மற்றும் பிரதேசவாசிகளோடு பிரதேச மதகுருவும் எதிர்ப்பு சுலோகங்களை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

இதன்போது இப்பகுதியில் கொட்டப்படுகின்ற பல்வேறு குப்பைகள் ஊடாக ஈ தொல்லைகள் அதிகமாக காணப்படுவதால் தமது வீடுகளில் சுகாதார பிரச்சினைக்கு ஆளாகி வருவதாக ஆர்ப்பாட்டகாரர்கள் பிரதேச சபைக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

அதேவேளை அளவுக்கு அதிகமான வெளியிட குப்பைகளை நுவரெலியா பிரதேச சபை கழிவு அகற்றும் பகுதிக்கு கொண்டு வந்து கொட்டுவதாக புகார் தெரிவிக்கும் பிரதேசவாசிகள் மற்றும் நகர மக்கள், உடனடியாக பிரதேச சபை இந்த குப்பைகள் கொட்டும் விடயத்தில் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும், சுகாதார சீர்கேட்டினால் பாதிக்கப்படும் இம்மக்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த காலங்களில் நுவரெலியா பிரதேச சபையின் ஊடாக நுவரெலியா பிரதேச சபையின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து ஏராளமான குப்பைகள் இந்த குப்பை மேட்டில் கொட்டப்பட்டு வந்தன.

இதற்கு பல்வேறு வகையில் எதிர்ப்புகளையும் ஆர்ப்பாட்டங்களையும் இம்மக்கள் முன்னெடுத்தனர்.

இருந்தபோதிலும் உரிய நடவடிக்கையை எடு்பபதற்கு பிரதேச சபை காலதாமதத்தை எதிர்கொண்டதால் மீண்டும் ஒரு போராட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடதக்கது.

Leave a comment