டிரம்பின் புதிய தெற்காசிய கொள்கையை நிராகரித்த பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கமிட்டி

286 0

ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புதிய கொள்கையை ஏற்க முடியாது என பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கமிட்டி தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்காசியாவுக்கான புதிய கொள்கையை சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டார். அதில், ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை வளர்க்கும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட வேண்டாம் என டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். மேலும், தீவிரவாதம் குறித்த இரட்டை நிலைப்பாட்டை பாகிஸ்தான் கைவிட வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவின் புதிய தெற்காசிய கொள்கை குறித்து விவாதிப்பதற்காக பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு கமிட்டியின் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர், கவர்னர், எதிர்கட்சி தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில், ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை பாகிஸ்தான் வளர்ப்பதாக அமெரிக்காவால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் பங்கேற்ற வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் நபீஸ் சகாரியா டுவிட்டரில் கூறுகையில், ஆப்கானிஸ்தான் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துக் கொள்கிறது. ஆப்கானிஸ்தானில் நடைபெறும் தீவிரவாத செயல்களுக்கு பாகிஸ்தான் எப்போதும் துணை போகாது என்றார்.

Leave a comment