பார்சிலோனா தாக்குதலில் இந்தியர்கள் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை – சுஷ்மா ஸ்வராஜ்

1029 0

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பாதசாரிகள் மீது வேனை மோதவிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்பட்டதாக தகவல் வரவில்லை என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் உள்ள லாஸ் ராம்ப்லாஸ் என்ற சுற்றுலா பகுதியில் இருக்கும் ப்லகா கடலுன்யா பிளாசா அருகே பாதசாரிகள் சாலையை கடந்து கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென அங்கு வந்த வேன் ஒன்று பாதசாரிகள் மீது பயங்கரமாக மோதியது.

இதனால், அங்கு கடும் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
மக்கள் மீது வேனை மோதவிட்டு அதனை ஓட்டி வந்தவன் தப்பி ஓடிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கோர தாக்குதலில் 13 பொதுமக்கள் பலியானதாகவும், 100க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், பார்சிலோனா தாக்குதலில் இந்தியர்கள் யாரும் காயமடைந்துள்ளதாக எந்த தகவலும் வரவில்லை என மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் தனது ட்விட்டரில் சுஷ்மா தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினில் உள்ள இந்தியர்களை தொடர்பு கொள்ள 34-608769335 என்ற அவசர உதவி எண்களை வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Leave a comment