நடிகர் ஆரியின் ‘மாறுவோம் மாற்றுவோம்’ தொண்டு நிறுவனம் சார்பில் ‘நானும் ஒரு விவசாயி’ என்ற தலைப்பில் பாரம்பரிய நாட்டு விதைகளை விதைத்து கின்னஸ் சாதனை படைக்க உள்ளனர்.
இந்த சாதனை நிகழ்ச்சி எதிர்வருகிற 26ஆம் திகதி திண்டிவனம் அருகில் உள்ள ஆவணிப்பூர் கிராமத்தில் நடைபெறுகிறது.
இதில் மாணவர்கள், சினிமா பிரபலங்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் உள்பட 5 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள்.
இதற்கான விழிப்புணர்வு போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
நானும் ஒரு விவசாயிதான். பாரம்பரிய நாட்டு விதைகளை விதைத்து நாமும் மாறுவோம். மாற்றுவோம். நமது அஜாக்கிரதையால் நதிகள் சாக்கடை ஆகும். நிலங்கள் பாலை ஆகும்.
நாட்டு விதைகளை தவிர்த்து வியாபாரத்துக்காக மாற்று விதைகளை கொண்டு வந்தனர்.
இதனால் 70 சதவீத பாரம்பரிய விதைகள் அழிந்துவிட்டன. இப்போது 30 சதவீத பாரம்பரிய விதைகள்தான் இருக்கின்றன. அதை காக்க வேண்டியது நமது கடமை. அந்த நிலையை உருவாக்குவோம். நாமும் ஒரு விவசாயியாக மாறி மாற்றுவோம்.
எனக்கு பிடித்த பல பழங்களை சாப்பிடுவதையே நிறுத்தி விட்டேன். காரணம் எப்படி உருவாகின்றன என்பது எனக்கு தெரியும். எனவே, பாரம்பரிய விதைகளை விதைக்கும் இந்த புரட்சி வெற்றி பெற்றால் நாம் விஷ உணவில் இருந்து விடுபடலாம். இதற்கு இந்த சிறு குழு மட்டுமல்ல அனைவரும் உழைப்போம். இதில் நானும் சேர்ந்ததை பெருமையாக கருதுகிறேன் என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இயற்கை பேரிடர் காலத்தில் மக்களுக்கு உதவும் ‘தோழமை 108’ அமைப்பு தொடங்கப்பட்டது. இதில் பெட்ரிசியன் கல்லூரி தாளாளர் ஜான்சன்ரெக்ஸ், நடிகர் ஆரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

