மேற்கு ஆப்ரிக்க நாடான புர்கினா பாசோவில் உணவகத்தில் புகுந்து தீவிரவாதி நடத்திய தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு ஆப்ரிக்க நாடான புர்கினா பாசோவில் உணவகத்தில் புகுந்து தீவிரவாதி நடத்திய தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள நாடான புர்கினா பாசோவின் தலைநகர் வாகடூகுவில் இருக்கும் உணவகம் ஒன்றில் நேற்று நுழைந்த தீவிரவாதி ஒருவன், தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுத்தள்ளினான். மேலும், அங்கிருந்த சிலரை அவன் பிணயக்கைதியாக பிடித்து வைத்திருந்தான்.
தகவலறிந்து சென்ற பாதுகாப்பு படையினர் சில மணிநேரங்கள் போராடி தீவிரவாதியை சுட்டுக்கொன்று பொதுமக்களை மீட்டனர். தீவிரவாத தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட 18 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடா, பிரான்ஸ், குவைத் மற்றும் செனகல் நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இந்த செய்தியை சம்பந்தப்பட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சகமும் உறுதி செய்துள்ளன.
தாக்குதல் நடத்திய தீவிரவாதி அல் கொய்தா ஆதரவு தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஜனவரி மாதத்தில் இந்நாட்டில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 30 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.