மடு திருத்தலம் வெள்ளத்தில் மூழ்கியது

347 0

வரலாற்றில் என்றுமில்லாதவாறு கடும் மழை பெய்து வருவதால் மடு அன்னையின் திருவிழாவை வழக்கமான முறையில் கொண்டாட முடியாதவாறு தடைப்பட்டுள்ளது.

நாட்டின் நாலாபுறமும் இருந்து வந்த யாத்திரீகர்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

மடு திருத்தலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால் யாத்திரீகர்கள் தற்காலிகமாக அமைந்து தங்கியிருந்த கூடாரங்கள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

இன்று மாலை 6 மணிக்கு இடம்பெற  இருந்த வழிபாடு நிறுத்தப்பட்டு பிரதான ஆலயத்தில் 4.30 மணிக்கு திருச்செபமாலையின் இரு காரணிக்கங்கள் செபிக்கப்பட்டு, மடு அன்னைக்கு யாத்திரீகர்களால் பிரியாவிடை செபம் சொல்லப்பட்டு மரியன்னையின் திருச்சொரூப ஆசீர்வாதத்துடன் வழிபாடுகள் நிறைவடைந்தது.

இதேவேளை, ஆயிரக்கணக்கான யாத்திரீகர்கள் தொடர்ந்தும் மடுத்திருப்பதியில் தங்கியிருப்பதற்கு  காலநிலை ஏதுவாக அமையாத காரணத்தால் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகரின் தலைமையில் கூடிய குருக்கள் குழு, தொடர்ந்து கடும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தால் திருவிழா திருப்பலி ஆலயத்திற்குள் இடம்பெறுமென தீர்மானித்தது.

இதையடுத்து திருவிழாவில் கலந்துகொள்ள வந்திருந்த ஏராளமான யாத்திரீகர்கள் தமது இருப்பிடங்களை நோக்கி திரும்புவதை அவதானிக்க முடிந்தது.

 

Leave a comment