100 வது நாளாக இரணைதீவு மக்களின் நில மீட்பு போராட்டம்

219 0

கிளிநொச்சி பூநகரி பிரதேச இரணைத்தீவு மக்களின் சொந்த நிலத்திற்குச் செல்வதற்கான போராட்டம் இன்று நூறாவது நாளை எட்டியுள்ளது.

அமைச்சர்கள், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா், அதிகாரிகள் என அனைவரினதும் வாக்குறுதிகள், காலக்கெடுக்கள் கடற்காற்றோடு பறந்துவிட இரணைத்தீவு மக்களின் போராட்டம் நூறாவது நாளை எட்டியுள்ளது.

தங்களது பூர்வீக  இடத்தில் மீள குடியேற வேண்டும் என வலியுறுத்தி தொடர்  கவனயீர்ப்பு போராட்டத்தை  ஆரம்பித்து இன்று நூறாவது நாளாகும். இதனை முன்னிட்டு இரணைமாதாநகரில் அமைந்துள்ள தேவாலயத்தில் விசேட பூசை வழிபாடுகளையும் மேற்கொண்ட  மக்கள் இதுவரை காலமும் கடற்கரையில்  இடம்பெற்று வந்த போராட்டம் இனி  அருகில் உள்ள தேவாலயத்தில் இடம்பெறும். வரும் மழைக்காலம் என்பதனால் போராட்ட இடத்தை மாற்றியிருகின்றோம் எனத் தெரிவித்த மக்கள்

நாங்கள்  போராட்டத்தை ஆரம்பித்து இன்று செவ்வாய் கிழமை நூறாவது நாள்  இந்த நூறு நாளுக்குள் பல  அரசியல்வாதிகள் வந்து சென்றுள்ளனர்  இதன் போது அவா்கள் அளித்த எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.

எமது பிரதேசத்தைச் சேர்ந்த   பெண் அமைச்சர்  வந்தாா் இன்னும்  இரண்டு வாரங்களில் சொந்த நிலத்திற்குச் செல்லலாம்  நல்லாட்சி அரசு அதற்கான நடவடிக்கை எடுக்கும்  என்பதோடு கடந்த அரசை குற்றம் சொல்லிவிட்டு சென்று விட்டாா்.

எமது மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி ஓருங்கிணைப்புக் குழுவின் தலைவருமாக இருக்கின்றவரும் வந்தாா். கடந்த ஆட்சியையும், அதனோடு சேர்ந்தியங்கியவா்களையும்  குற்றம் சுமத்தினாா். தான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை அழைத்து வந்து தீர்வு தருவதாக  உறுதிமொழி அளித்தாா்.  காலக்கெடுவும் வழங்கினாா் எதுவும் நடைபெறவில்லை.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வந்தாா்  அவரோடு எற்கனவே வந்த எல்லா அரசியல் பிரமுகர்களும் வந்தனா்  அவா்களும் காலக்கெடு வழங்கினாா் உறுதிமொழி அளித்தாா்கள்  ஆனால் அவா்கள்  உறுதிமொழிகளும் காலக்கெடுக்களும் இந்த கடற்கரை காற்றோடு சென்றுவிட்டது.

Leave a comment