திருமாவளவன் பக்கபலமாக இருக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் நேரடி அழைப்பு

352 0

மாற்றம் வேண்டும் என்றால் திருமாவளவன் பக்கபலமாக இருக்க வேண்டும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலனின் தாயார் ஆர்.நேசம்மாளின் படத்திறப்பு நிகழ்ச்சி சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் புழல் டாக்டர் ஆ.தர்மராஜ் வரவேற்புரையாற்றினார். இதில் தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நேசம்மாளின் உருவப்படத்தை திறந்து வைத்தார். ‘நெஞ்சமெல்லாம் நேசம்மாள்’ என்ற நூலையும் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனத்தலைவர் டி.தேவநாதன் யாதவ், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, இ.சி.ஐ. பிரதம பேராயர் எஸ்றா சற்குணம், வி.ஜி.பி. குழும தலைவர் வி.ஜி.சந்தோஷம், தி.மு.க. வர்த்தகர் அணி மாநில செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், மாற்றம் வேண்டும் என்றால் திருமாவளவன் பக்கபலமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். திருமாவளவன் பக்கபலமாக இருந்தால் தேர்தலில் வெற்றிபெறுவோம் என்றார்.

ஸ்டாலின் விடுத்த அழைப்பு குறித்து திருமாவளவனிடம் கருத்து கேட்ட போது, ’மக்கள் பிரச்சனைகளுக்காக திமுகவுடன் இணைந்து செயல்படுவதில் எந்தவித சங்கடமும் இல்லை, கூட்டணி பற்றி, தேர்தல் நேரத்தில் ஏற்படும் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்’ என்று கூறினார்.

 

Leave a comment