ரூ.1,634 கோடியில் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தும் திட்டம்

347 0

ரூ.1,634 கோடியில் அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 1.9.2016 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி 110-வது கீழ், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மேம்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை அரங்குகள், அறுவை சிகிச்சைக்கு முன் மற்றும் பின் கவனிப்புபிரிவுகள், தீவிர சிகிச்சை பிரிவுகள் ரத்தகூழ்ம பகுப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்படும் மற்றும் இம்மருத்துவமனைகளுக்கான மருத்துவக் கருவிகள் வழங்கப்படும் என்றும் சேலம், வேலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி மற்றும் தூத்துக்குடி ஆகிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும், ஈரோடு, திருப்பூர், கடலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, பெரியகுளம் ஆகிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கும் அதிநவீன மருத்துவக் கருவிகள் வழங்கப்படும் என்றும், சென்னை-ஆவடி, சேலம்- மணியனூர், திருப்பூர்-வேலம்பாளையம் மற்றும் திருநெல்வேலி-கண்டியப்பேரி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சைபிரிவு, ரத்தகூழ்ம பகுப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்படும். அத்துடன் இந்த மருத்துவமனைகளுக்கு தேவையான நவீன மருத்துவக் கருவிகள் வழங்கப்படும் என்றும் அறித்தார்.

ஜெயலலிதாவின் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாகவும், நகர்ப்புற சுகாதார சேவையை மேலும் மேம்படுத்தும் பொருட்டும், 2016-17-ம் ஆண்டு இடைக்கால நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார நலத் திட்டம் ரூ.1,634 கோடி தொகையில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை வழங்கும் கடனுதவியுடன், நகர்ப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் 7 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். இத்திட்டத்தினால் நகர்ப்புற சுகாதாரம் மேம்படுவதுடன், தொற்றா நோய்களுக்கான உயர்தர அறுவை சிகிச்சைகள் பெரும் அளவில் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment