சீன தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் அஜித் தோவல் சந்திப்பு

235 0

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பீஜிங் சென்றுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன நாட்டின் சக அதிகாரி யங்கை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது சிக்கிம் எல்லை பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது.

பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு மாநாடு சீன தலைநகர் பீஜிங்கில் நாளை தொடங்குகிறது. இரண்டு நாள் நடைபெறும் மாநாட்டில், பிரிக்ஸ் அமைப்பில் உள்ள சீனா, இந்தியா, பிரேசில், ரஷ்யா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளும் இதில் கலந்து கொள்கின்றனர்.

இதனிடையே, பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான குழு பீஜிங் இன்று காலை சென்றடைந்தது.

சிக்கிம் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா சீனா இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் அஜித் தோவலின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில், பிரிக்ஸ் மாநாட்டின் நடுவே அஜித் தோவல் சீன பாதுகாப்பு ஆலோசகர் யங் ஜெயச்சியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது யங், முக்கிய விவகாரங்கள் குறித்து தோவலிடம் விவாதித்ததாக கூறப்படுகிறது.

சீன தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யங் ஜெயச்சி தென் ஆப்பிரிக்கா, பிரேசில் மற்றும் இந்திய நாடுகளின் பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்து பல்வேறு விவகாரங்களில் தங்கள் நாட்டின் நிலைப்பாட்டை விளக்கியதாக ஊடகங்களில் வெளியானது.

முன்னதாக, எல்லையில் இந்தியா தனது படைகளை திரும்ப பெறாத வரை பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாக இருக்காது என்று சீனா திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment