நரிக்குறவர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் – ஜீ.கே வாசன் 

23416 103

நரிக்குறவர் இனத்தை காலம் தாழ்த்தாமல் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு சட்டத்தை இயற்ற வேண்டியது ஆளும் ஆட்சியாளர்களின் கடமை என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
நரிக்குறவர் என்ற குருவிக்காரன் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து பல ஆண்டுகளாக நரிக்குறவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

நரிக்குறவர்கள் தங்களின் வாழ்க்கை முறையானது மலைவாழ் இன மக்களைப் போன்றே இருப்பதால் தங்களையும் மழைவாழ் இன பட்டியலில் சேர்க்க மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

தற்போது நரிக்குறவர்களின் குலத்தொழிலான ஊசி, மணி, பாசிமணி விற்பனையும் நலிவடைந்துவிட்டது.
மேலும் சில வகையான பறவைகளையும், சிலவகையான மிருகங்களையும் வேட்டையாடி வந்த தொழிலையும் கைவிட்டு விட்டனர்.

நாடோடிகளாக நடைபாதைகளிலும், பழைய கட்டிடங்களிலும், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலும் தங்கி வாழ்ந்து வருகிறார்கள்.
தற்போதைய 21 ஆம் நூற்றாண்டில் மிகவும் பின் தங்கிய நிலையில் வாழ்க்கை வாழ்வது மிகவும் வேதனைக்குரியது.

இந்தநிலையில், நரிக்குறவர் இனத்தை காலம் தாழ்த்தாமல் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜி.கே.வாசன் கோரியுள்ளார்.

Leave a comment