எடப்பாடி அணியில் இணைந்தார் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.

272 0

ஓ.பி.எஸ். அணியில் இருந்து பிரிந்து வந்த ஆறுக்குட்டி எம்.எல்.ஏ, இன்று காலை முதல் மந்திரி எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணைந்தார்.

அதிமுக அணிகள் இரண்டாக பிரிந்தபோது, ஓ.பி.எஸ். தலைமையிலான அதிமுக அணியில் இணைந்தவர் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி.

சமீப காலமாக ஓ.பி.எஸ். அணியில் தான் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், 5 மாதமாகியும் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணையாததால் ஓ.பி.எஸ். அணியில் இருந்து பிரியப் போவதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து நேற்று மாலை ஓ.பி.எஸ். அணியில் இருந்து ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. விலகினார்.

இதுகுறித்து ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. கூறுகையில், ”அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்தபோது தொகுதி மக்களின் கருத்தை கேட்டு ஓ.பி.எஸ். அணியில் இணைந்தேன். அங்கு நான் புறக்கணிக்கப்பட்டு வந்தேன்.

அரசை தொடர்ந்து எதிர்த்தால் எனது தொகுதி மக்களுக்கு வளர்ச்சி திட்டப்பணிகளை கொண்டு வரமுடியாத சூழல் உருவானது. எனவே தொகுதி மக்களின் நலனை கருதி நான் ஓ.பி.எஸ். அணியில் இருந்து விலகினேன். எனது முடிவுக்கு தொகுதி மக்கள் எனக்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்தினர்” என தெரிவித்தார்.

இந்நிலையில், ஆறுக்குட்டி எம்.எல்.ஏ இன்று காலை முதல் மந்திரி எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணைந்தார். சேலத்தில் உள்ள முதல் மந்திரி எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு சென்ற ஆறுக்குட்டி எம்.எல்.ஏ,, அவருக்கு பூங்கொத்து கொடுத்து அவரது அணியில் இணைந்தார். ஆறுக்குட்டி எம்.எல்.ஏவுக்கு முதல் மந்திரி எடப்பாடி பழனிச்சாமி சால்வை அணிவித்து, தமது அணியில் இணைத்துக் கொண்டார்.

Leave a comment