கடன் தொல்லையால் கஸ்டப்பட்டவர் சடலமாக மீட்பு

297 0

கடன் தொல்லையால் விரக்தியுற்றிருந்த குடும்பப் பெண்ணொருவர் தோட்டத்திலிருந்து சனிக்கிழமை 08.07.2017 சடலமாக மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவு, தன்னாமுனை கொலனிப் பகுதியிலுள்ள தோட்டமொன்றில் இருந்து 4 பிள்ளைகளின் தாயான முத்துக்குமார் சிவயோகம் (வயது 47) என்ற குடும்பப் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டார்.

வவுனியா, செட்டிக்குளத்தைச் சேர்ந்த இவர் கடன் தொல்லை காரணமாக மன விரக்தியில் இருந்து வந்துள்ளார் என்பது விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் கூறினர்.

இவர் வவுனியாவில் வசித்தபோது அங்கு கடன்வழங்கும் நிறுவனமொன்றிடமிருந்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாகப் பெற்றுள்ளார்.

அதேவேளை, அக்கடனைத் திருப்பிச் செலுத்த வழிதெரியாமல் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் தன்னாமுனைப் பிரதேசத்திற்கு வந்து சேர்ந்த இப்பெண் கடந்த 4 மாதங்களாக தன்னாமுனையில் தங்கியிருந்து தோட்டங்களிலும் வீடுகளிலும் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

இதன்போதே அவர் தங்கியிருந்து தோட்ட வேலை செய்து வந்த இடத்தில் சடலமாகக் கிடப்பதை அறிந்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இப்பெண் இறந்து கிடந்த இடத்திலிருந்து சுமார் ஐந்து மீற்றர் தூரத்தில் நஞ்சுப் போத்தலும், இறப்பர் கிளாசும் காணப்பட்டுள்ளது.

இச்சம்பவம்பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனை இடம்பெற்ற பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சடலம் ஞாயிற்றுக்கிழமை 09.07.2017 வவுனியா செட்டிக்குளத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment