யாழ்ப்பாணத்தில் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இந்திய மீனவர்கள் 8 பேர் நேற்று இரவு  கைது(காணொளி)

230 0

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து காங்கேசந்துறை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களையும், கடற்படையினர் இன்று மதியம் யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அத்துடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இரு படகுகளும், இன்று மதியம் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினரிடம் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

நேற்று இரவு எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து குறித்த 8 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 3 பேர் ஒரு படகிலும், 5 பேர் பிறிதொரு படகிலும் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள குறித்த மீனவர்கள் இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

Leave a comment