ஐ.எஸ் இயக்கத்திற்கு நிதி மற்றும் ஆட்களை திரட்டியதாக சென்னையில் ஒருவர் கைது

224 0

ஐ.எஸ் இயக்கத்திற்கு நிதி மற்றும் ஆட்களைத் திரட்டியதாக சென்னை முத்தையால் பேட்டையைச் சேர்ந்த ஹாரூண் என்பவர் ராஜஸ்தான் மாநில போலீசாரால் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஹாரூண் என்பவர் சென்னை முத்தையால் பேட்டையில் வசித்து வந்தார். பர்மா பஜாரில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வந்த இவர் ஈராக் நாட்டில் செயல்படும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு, இந்தியாவில் நிதி மற்றும் ஆட்களை திரட்டியதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, இன்று காலை ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், முத்தையால் பேட்டையில் ஹாரூணை அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஹாரூண் ராஜஸ்தான் கொண்டு செல்லப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜமீல் முகமது என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய அவரிடம் விசாரணை நடத்தியபோது, தமிழகத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் அவருடன் தொடர்பில் இருப்பதாக வாக்குமூலம் அளித்திருந்ததாக கூறப்படுகிறது.

Leave a comment