நாட்டில் தற்போது எழுந்துள்ள குப்பை பிரச்சினை மூன்று மாதக்காலப்பகுதிக்குள் தீர்த்து வைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார்.
மேல்மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் தற்போது எழுந்துள்ள குப்பை பிரச்சினை மூன்று மாதக்காலப்பகுதிக்குள் தீர்த்து வைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். இதற்கு மக்களும் தங்களின் பொறுப்புணர்வுடனான ஒத்துழைப்பை அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும்
வீதிகளில் முறையற்ற விதத்தில் குப்பைகளை வீசுபவர்களுக்கு எதிராகவும், மகாணசபை மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களினால் இனங்காணப்பட்ட பகுதிகளில் குப்பைகளை கொட்டும் போது அதற்கு இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மீதொட்டமுல்லை குப்பை மேடு அனர்த்ததுக்கு பின்னர் நாட்டில் குப்பை பிரச்சினை பாரியளவில் எழுந்துள்ளன. கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் வீதியில் இரு மருங்கிலும் குப்பைகள் பாரியளவில் குவிக்கப்படுகின்றன.
மேலும் நகரங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை மீள் சுழற்சி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்களும் தங்களது பொறுப்புணர்வுடன் கூடிய ஒத்துழைப்பு அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும். வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை வகைப்பிரித்து மாநாகர சபை குப்பை வண்டிகளுக்கு கையளிக்க வேண்டும். இதனை மக்கள் கடைப்பிடித்தால் விரைவில் இந்த பிரச்சினை குறைவடையும் என அவர் மேலும் தெரிவித்தார்.