ஆப்கானிஸ்தான்: இந்தியா கட்டிய அணை அருகே தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 போலீசார் பலி

209 0

ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்தியா கட்டிய அணையின் அருகே தலிபான் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 10 போலீசார் பலியாகினர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் மாகாணத்தில் சால்மா அணை அமைந்துள்ளது. இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையேயான நட்புறவை வலுப்படுத்தும் விதத்தில் இந்த அணையை இந்தியா கட்டிக்கொடுத்தது. இதன் திறப்பு விழா கடந்த ஆண்டு நடைபெற்றது.

இந்நிலையில், சால்மா அணையின் அருகில் அமைந்துள்ள சோதனைச் சாவடி அருகே நேற்று தீவிரவாதிகள் ஊடுருவினர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை நோக்கி திடீர் தாக்குதல் நடத்தினர்.

தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு போலீசாரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு பணியில் இருந்த 10 போலீசார் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், நான்கு போலீசார் காயமடைந்தனர்.இதுகுறித்து பாதுகாப்புப்படை அதிகாரிகள் கூறுகையில், ‘‘தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 போலீசார் பலியாகினர். ஊடுருவிய தீவிரவாதிகளில் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்’’ என தெரிவித்துள்ளனர்.

Leave a comment