கட்சியில் சசிகலா, தினகரனுக்கு அடுத்து எடப்பாடிக்கு 3-வது இடம் தான்: எம்.எல்.ஏ வெற்றிவேல்

465 0

கட்சியில் சசிகலா, தினகரனுக்கு அடுத்து 3-வது இடத்திலே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார் டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. அம்மா அணியில் எடப்பாடி பழனிசாமி, தினகரன் ஆகியோர் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகிறார்கள். எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்கதமிழ்ச் செல்வன் உள்ளிட்ட 34 பேர் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள்.

வெற்றிவேலும், தங்க தமிழ்ச் செல்வனும் தினகர னுக்கு ஆதரவாகவும், எடப்பாடி அணிக்கு எதிராகவும் அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனால் அ.தி.மு.க.வில் பரபரப்பான சூழலே நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரான ராம்நாத் கோவிந்தை அ.தி.மு.க. ஆதரிக்கும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இது தினகரன் ஆதரவாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது. கட்சியை தினகரன் தான் வழி நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையை ஏற்காத நிலையில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் முடிவை அறிவித்திருப்பது 2 அணிகளுக்கும் இடையே மோதலை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கட்சியில் சசிகலா, தினகரனுக்கு அடுத்து 3-வது இடத்திலே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான வெற்றிவேல் கூறியுள்ளார். இது அ.தி.மு.க.வில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக வெற்றிவேல் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

ஜனாதிபதி தேர்தலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. கட்சியில் சசிகலா, தினகரனுக்கு அடுத்து 3-வது இடத்திலேயே எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.

ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரான சசிகலா எடுக்கும் முடிவே இறுதியானது. அவர் எடுக்கும் முடிவையே பின்பற்றுவோம். ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை சசிகலாவே விரைவில் முடிவெடுத்து அறிவிப்பார். அதன்படியே செயல்படுவோம்.இவ்வாறு தெரிவித்தார்.

தினகரன் ஆதரவாளரான ஜே.கே.ரித்திஸ் கூறுகையில், ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க. அம்மா அணி பா.ஜனதா வேட்பாளரை ஆதரிப்பதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். இது சசிகலாவிடம் அனுமதி பெற்றே எடுக்கப்பட்ட முடிவாகத்தான் இருக்கும் என்றார்.

இதனிடையே, சசிகலா உத்தரவின் படி அதிமுக பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும் என்று தினகரன் அறிக்கை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment