கொலம்பியாவில் வணிக வளாகத்தில் குண்டு வெடிப்பு: 3 பெண்கள் பலி

376 0

கொலம்பியா வணிக வளாகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

கொலம்பியா நாட்டின் தலைநகர் பக்கோட்டா. அங்குள்ள ஜோனா ரோசா பகுதியில் ஒரு வணிக வளாகம் உள்ளது. அந்த வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் ‘ஆன்டினோ ஷாப்பிங் சென்டர்’ என்ற கடையில் தந்தையர் தினத்துக்காக பரிசுப்பொருட்கள் வாங்குவதற்காக கூட்டம் அலைமோதியது.

அப்போது அங்குள்ள மகளிர் கழிவறையில் பலத்த சத்தத்துடன் ஒரு குண்டுவெடித்தது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அங்கு வந்திருந்தவர்கள் பீதியில் ஓட்டம் பிடித்தனர்.

இந்த குண்டுவெடிப்பு குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் படையினரும், மீட்பு படையினரும் விரைந்து வந்தனர். இந்த குண்டுவெடிப்பில் 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதல் என்று கொலம்பியா அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். பலியான 3 பெண்களில் ஒருவர், 23 வயதான பிரான்ஸ் பெண் ஜூலி ஹூயின், அங்குள்ள பள்ளி ஒன்றில் பணியாற்றி வந்தார் என தெரிய வந்துள்ளது. இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 2 பெண்கள் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டபோது வழியிலேயே உயிரிழந்தனர்.

இந்த குண்டுவெடிப்புக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Leave a comment