தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது

439 0

2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.

தமிழக பட்ஜெட் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுவிட்ட நிலையில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்துவதற்காக, தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற கூட்டத்தில், வனத்துறை, சுற்றுச்சூழல் துறை, பள்ளி கல்வித்துறை, உயர் கல்வித்துறை, கூட்டுறவுத் துறை, உணவுத் துறை ஆகிய 6 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்துள்ளது.

தொடர்ந்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் வந்ததால், 2 நாட்கள் சட்டசபைக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. இன்றைய கூட்டம் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து மின்துறை அமைச்சர் பி.தங்கமணி பேசுகிறார்.

ஏற்கனவே நடந்த 3 நாள் சட்டசபை கூட்டத்தில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் நடத்தி பணம் வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு எழுப்பி வருகிறார். இந்த பிரச்சினைக்காக முதல் நாளில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். அடுத்த 2 நாட்கள் அவர்களாகவே வெளிநடப்பு செய்தனர்.

ஆனால், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பணம் வினியோகித்ததாக கூறப்படும் பிரச்சினை தொடர்பாக, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக காவல் துறைக்கு இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ள நிலையில், இன்றைக்கு இந்தப் பிரச்சினையை தி.மு.க. கையில் எடுக்கும் என தெரிகிறது. இது தொடர்பாக, சட்டசபையில் காரசார விவாதம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Leave a comment