இரட்டை இலை எங்களுக்குத்தான் கிடைக்கும்: சீனிவாசன்

240 0

தேர்தல் ஆணையத்தால் முடக்கிவைக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னம் எங்கள் கைக்கு வரும் நேரம் வெகுதொலைவில் இல்லை. எங்களுக்கு இரட்டை இலை நிச்சயம் கிடைக்கும் என அமைச்சர் சீனிவாசன் கூறினார்.

மதுரையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழா வருகிற 30-ந்தேதி கொண்டாடப்படுகிறது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.இந்த விழாவை விமரிசையாக கொண்டாடுவது குறித்து அ.தி.மு.க. (அம்மா அணி) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை ரிங் ரோட்டில் இன்று நடைபெற்றது.கூட்டத்தில் அமைச்சர் கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ், அன்பழகன், ஓ.எஸ்.மணியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் அம்மா காட்டிய வழியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. எங்கள் அணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து விட்டோம்.

அந்த பிரமாண பத்திரத்தை வைக்கக்கூட இடம் இல்லாத நிலை தேர்தல் ஆணையத்துக்கு ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்படுகிறோம்.எனவே தேர்தல் ஆணையத்தால் முடக்கிவைக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னம் எங்கள் கைக்கு வரும் நேரம் வெகுதொலைவில் இல்லை. எங்களுக்கு இரட்டை இலை நிச்சயம் கிடைக்கும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை அனைவரது ஒத்துழைப்புடன் சிறப்பாக நடத்தி காட்டுவோம். எல்லோரும் பங்குபெரும் வகையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment